சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! விடிய விடிய வெளுத்த கன மழை! ஆவடியில் 20 செ.மீ கொட்டியது
சென்னை: சென்னை உட்பட வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரவு விடிய விடிய கனமழை பெய்து உள்ளது. இன்றும் மழை தொடர்ந்து வருகிறது. சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடர்கிறது.
Recommended Video
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு ஆரம்பித்த மழை இன்று காலை வரை விட்டு விட்டு கன மழையாக பெய்தது.
அதிகபட்சமாக ஆவடியில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது.

மழை அளவு
சோழவரத்தில் 15 சென்டிமீட்டர், திருவள்ளூரில் 13 சென்டிமீட்டர், பொன்னேரியில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. காஞ்சிபுரத்தில் 12 செ.மீ, செம்பரம்பாக்கத்தில் 12, ஸ்ரீபெரும்புதூர் 10, உத்தரமேரூரில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி இருக்கிறது. இதனால் காலையிலேயே வீட்டை விட்டு வெளியே செல்வோர் அவதிப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.

ஏன் மழை
குமரி கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று வானிலை மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட்
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் எனவே இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்படுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களில் 20 செ.மீ அல்லது அதற்கு மேல் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

ஆரஞ்சு அலர்ட்
வங்கக் கடலில் அந்த காற்று சுழற்சி 30ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் தமிழகத்தில் மழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதை ஒட்டிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications