அண்ணாமலை, பொன்னார், வானதி மறியல்.. 3 மணி நேரம் நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை: தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணா செய்வதால் 3 மணி நேரமாக நுங்கம்பாக்கத்தில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சனாதன சர்ச்சை தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது அந்த கூட்டத்தில் இருந்த இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்ட போதிலும் அவர் எதிர்ப்பை தெரிவிக்காததால் அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என தமிழக பாஜக கோரிக்கை விடுத்திருந்தது.

இதுகுறித்து அண்ணாமலை கூறுகையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மிக உரிமையை சேகர்பாபு இழந்து விட்டார். இன்னும் ஒரு வார காலத்தில், செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், தனது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து சேகர்பாபு பதவி விலக வேண்டும்.
இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுடன் துணை போகிறவருக்கு, இந்து சமய அறநிலையத் துறையில் என்ன வேலை? செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள், சேகர்பாபு அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவில்லை என்றால், செப்டம்பர் 11ஆம் தேதி, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகம் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன்படி சேகர்பாபு தனது பதவியிலிருந்து விலகாததால் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத் துறை அலுவலகத்தை இன்று முற்றுகையிட சென்றனர். ஆனால் அவர்களை போலீஸார் வள்ளுவர் கோட்டம் அருகே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சுமார் 3 மணி நேரமாக ஆயிரக்கணக்கான பாஜகவினர் மறியலில் ஈடுபட்டு வருவதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் இருந்து வள்ளுவர் கோட்டம் வரை இவர்கள் ஊர்வலமாக சென்றதே 2 கி.மீ. நீளத்தில் இருந்தனர். தற்போது அண்ணாமலை உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மாலை 6 மணிக்கு அலுவலக பணிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
இந்த நிலையில் அண்ணாமலையை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் கைது நடவடிக்கை எடுத்தால் மேலும் போராட்டம் வலுப்பெறும் என்பதால் அவர்களாக கலைந்து செல்ல போலீஸார் முயற்சித்து வருகிறார்கள். இன்னும் முக்கால் மணி நேரத்திற்குள் அவர்களாகவே கலைந்து சென்றுவிடுவார்கள்.












Click it and Unblock the Notifications