2 கி.மீ தொலைவுக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்.. சென்னை திரும்பியபோது கடும் போக்குவரத்து நெரிசல்!
சென்னை: விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த மக்களால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. அன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. சென்னை உள்பட வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், வெள்ளி, சனி, ஞாயிறு (ஏப்ரல் 21) ஆகிய 3 நாள்கள் தொடர் விடுமுறைக்கு பின், தங்கள் சொந்த ஊர்களிலிருந்து ஏராளமான மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
இதன் காரணமாக நேற்று மாலை முதல் அதிகாலை வரை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள், ஆயிரக்கணக்கான கார்கள், சிறப்பு பேருந்துகள், அரசு பேருந்துகள் மூலம் சென்னை திரும்பி வந்த நிலையில், அதிகமான வாகனங்கள் காரணமாக நேற்று இரவு முதல் சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் பகுதியில் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்றதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
எஸ்.பி கோவில் அருகே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலால் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டனர். இதேபோல, ரயில் நிலையங்களிலும் கடுமையான கூட்டம் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications