விநாயகர் சதுர்த்தி விடுமுறை.. பம்பர் டூ பம்பர் லைன் கட்டிய வாகனங்கள்.. கோயம்பேட்டில் செம டிராஃபிக்
சென்னை: வார விடுமுறை, விநாயகர் சதுர்த்தி விடுமுறை என தொடர்ந்து 3 நாட்களுக்கு விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பதால் கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விநாயகர் சிலையை வாங்கி அதற்கு அலங்காரம் செய்து வைத்து பிறகு அவருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், எள்ளுருண்டை உள்ளிட்டவைகளை செய்து படைப்பது வழக்கம்.

இந்த விழாவை பலர் கோலாகலமாக கொண்டாடுவர். வீதிகளில் பெரிய பெரிய விநாயகர் சிலைகளை வைத்தும் வழிபடுவர். பின்னர் சில நாட்கள் கழித்து விநாயகர் விஜர்சன ஊர்வலம் நடத்தப்படும். இதில் பிள்ளையார் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடற்கரைகளில் கரைக்கப்படும்.
இந்த பண்டிகைக்காக சென்னைக்கு வெளியூர்களில் இருந்து வந்திருப்போர் சொந்த ஊர்களில் கொண்டாடுவது வழக்கம். இதனால் ஆண்டுதோறும் இந்த விழாக்களின் போது சொந்த ஊருக்கு செல்வர். சில நேரங்களில் விநாயகர் சதுர்ச்சி வார நாட்களில் வந்துவிட்டால் சிலர் ஒரு நாள் விடுப்புக்கு செல்ல வேண்டாம் என முடிவு செய்து இருக்கும் இடத்திலேயே கொண்டாடுவர்.

ஆனால் இந்த முறை திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. ஏற்கெனவே சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் 3 நாட்கள் விடுமுறை கிடைத்த மகிழ்ச்சியில் பலர் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். இதனால் கோயம்பேடு டூ பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்கள், கார்கள், பஸ்கள் என வாகனங்களின் பெருக்கம் அதிகமாகவே இருக்கிறது.
கோயம்பேடு பாலத்தின் மீது ஏராளமான வாகனங்கள் நின்றிருந்தன. இதனால் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டு இஞ்ச் பை இஞ்ச்சாக வாகனங்கள் நகர்ந்தன. இதனால் உள்ளூர்வாசிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். போதாகுறைக்கு மழை வேறு வந்துவிட்டதால் அது மேலும் போக்குவரத்து பாதிப்பை அதிகப்படுத்தியது. கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ரயில்நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
விநாயகர் சதுர்த்திக்காக பூ, காய்கறிகளை ஏற்றிக் கொண்டு கோயம்பேட்டிற்கு காய்கறி வாகனங்களும் வந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆமை வேகத்தில் வாகனங்கள் நகர்ந்தன. அரை மணி நேரத்தில் கடக்கும் தூரத்தை கடக்க மணிக்கணக்கில் வாகன ஓட்டிகள் காத்திருந்தனர்.












Click it and Unblock the Notifications