சென்னை செல்வோர் கடும் அவதி! பரனூர் டூ பெருங்களத்தூர் வரை கடும் போக்குவரத்து நெரிசல்.. ஐயோ முடியல
சென்னை: தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முடித்து பொதுமக்கள் இன்று சென்னை திரும்பி வருவதால் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி முதல் பெருங்களத்தூர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை கடந்த 31ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட சென்னையில் இருக்கும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அரசு பஸ் , தனியார் பஸ், ரயில்கள், கார்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்னையை காலி செய்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி மொத்தம் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சென்னையை விட்டு சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு நவம்பர் 1, 2, ஆகிய 2 நாள் விடுமுறையை சொந்த ஊர்களில் கழித்தனர்.
இதையடுத்து இன்று பொதுமக்கள் பலரும் சென்னை நோக்கி திரும்பி வருகின்றனர். 4 நாட்களுக்கு பிறகு நாளை மீண்டும் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் செயல்பட உள்ளன. இதனால் இன்றைய தினமே பலரும் கார்களில் சென்னைக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் தற்போது பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி - விழுப்புரம் சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் ஏராளமான கார்கள் செல்கின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் அரை கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் பரனூர் பாலம் அருகே கனரக வாகனங்கள் காஞ்சிபுரம் நோக்கி திருப்பி விடப்படுகின்றன. கார்கள், பஸ்கள் மட்டும் சென்னையை நோக்கி பயணிக்கின்றன.

மதுராந்தகம் சுங்கச்சாவடியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அங்கு 3 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அதேபோல் சென்னை தாம்பரம் ஜிஎஸ்டி சாலையிலும் ஏராளமான வாகனங்கள் குவிந்துள்ளன. அங்கும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் சென்னை பெருங்களத்தூரில் சாலையிலும், மேம்பாலங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அதேபோல் சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் காவேரிபாக்கம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நேரம் செல்ல செல்ல வாகனங்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications