மொத்தமாக குவிந்த மக்கள்.. சென்னை சிங்கபெருமாள் கோயில் அருகே 3 கிமீ தூரம் டிராபிக் நெரிசல்! என்னாச்சு
சென்னை: கோடை விடுமுறை முடிந்து அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் சென்னைக்குத் திரும்பி வருவதால் சிங்கபெருமாள் கோயில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து இதர வகுப்புகளுக்கும் இறுதியாண்டு தேர்வு நடக்கும்.

இந்தாண்டு லோக்சபா தேர்தல் நடந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தை விட முன்கூட்டியே இறுதி தேர்வு நடத்தப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் ஏப்ரல் கடைசி வாரத்திற்குள் இறுதி தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், கோடை விடுமுறை விடப்பட்டது.
பள்ளிகள் திறப்பு: வழக்கமாகக் கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும்.. இந்தாண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை ஜூன் 4ஆம் தேதி வெளியாவதால் முதலில் ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், அதீத வெப்பம் காரணமாக மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பதை சில நாட்கள் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதை ஏற்றுத் தமிழக அரசு, ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தது. பள்ளிகள் திறக்கப்பட இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், கோடை விடுமுறைக்காகச் சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னைக்குத் திரும்பி வருகிறார்கள். குறிப்பாக நேற்றிரவு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் சென்னையை நோக்கி வந்தனர்.
கடும் போக்குவரத்து நெரிசல்: இதனால் சென்னையை அடுத்துள்ள சிங்கபெருமாள் கோயில் பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க ஒரு வாரமே இருப்பதால் குழந்தைகளை புதிய வகுப்புகளில் சேர்க்கும் நடைமுறைக்காகச் சென்னை திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. சில மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications