சென்னையில் சாலையோரம் கால் வயிற்றுக் கஞ்சிக்காக தலைகவசம் விற்றவர்.. தலை நசுங்கி பலி! எமனாக வந்த லாரி
சென்னை: சென்னை விமான நிலையம் அருகே சாலையோரம் ஹெல்மெட் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் மீது லாரி மோதி தலை நசுங்கி பலியானார்.
சென்னை விமான நிலையம் அருகே ஜி.எஸ்.டி, சாலை, பல்லாவரம் புதிய மேம்பால இறக்கத்தில் சாலையோரம், நடைபாதையில் ஹெல்மெட் கடை வைத்து நடத்தி வருபவர் பழைய பல்லாவரத்தை சேர்ந்த அப்துல் காதர்(62).
இவர் கடையில் அமர்ந்திருந்த போது, மேம்பாலத்தில் மீதிருந்து வந்த டேங்கர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இவர் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பியோடி விட்டார்.

குரோம்பேட்டை
தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் ஜி.எஸ்.டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சமபவம் தொடர்பாக சென்னை குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விபத்து
இதனிடையே தூத்துக்குடி அருகே தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன், தண்ணீர் லாரி மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 4 பெண்கள் உயிரிழந்தனர். ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர், முதலிப்பட்டி, நடுவக்குறிச்சி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சில்லாநத்தம் பேருந்து நிலையம் அருகே சில பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்பளம் ஆன வேன்
அங்கிருந்து சுமார் 20 மீட்டர் தூரத்தில், புதூர் பாண்டியபுரத்தில் இருந்து புதியமுத்தூரை நோக்கி வந்த தண்ணீர் லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. வேனில் பயணம் செய்த சில்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராணி(45), காமாச்சி(40) முப்புள்ளிபெட்டியைச் சேர்ந்த சந்தியா(48) ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

போலீசார் விசாரணை
கிராம மக்கள் ஓடி வந்து காயமடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி நடுவக்குறிச்சியைச் சேர்ந்த மணிமேகலை(20) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் 14 பேர் படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்டம் புதியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications