தாராள உதவி செய்யுங்கள்.. எங்களிடமும் சொல்லுங்கள்.. இணைந்து இயலாமையை வெல்லுவோம்
சென்னை: கொரோனாவைரஸ் லாக்டவுனால் உலகமே ஸ்தம்பித்துப் போய்க் கிடக்கிறது. எல்லா நாடுகளுமே கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. தமிழகத்திலும் லாக்டவுன் தொடர்வதால் பலர் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை கூலித் தொழிலாளர்கள், இடம் பெயர்ந்து கூலி வேலை பார்ப்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சுமைக் கூலித் தொழிலாளர்கள், தினசரி வருவாய் ஈட்டக் கூடிய வகையிலான வேலை செய்து வந்தோர் என கோடிக்கணக்கானோர் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
தினசரி சாப்பாட்டுக்கே வழியில்லாமல் அல்லல்படுவோர் அதிகம். தமிழக அரசும், மத்திய அரசும் அவர்களுக்காக பல உதவிகளை, நிவாரணங்களை அறிவித்துள்ளன. அம்மா உணவகங்களில் இலவச சாப்பாடும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது மட்டும் போதாது. இதனால் அரசியல் கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும், தனியார் அமைப்புகளும், தொண்டுள்ளம் படைத்த பலரும் பல்வேறு வகையில் உணவு உள்ளிட்ட பொருட்களை கொடுத்து உதவிக் கொண்டுள்ளனர்.
அப்படிப்பட்டவர்கள் எங்களிடம் அதைத் தெரிவிக்கலாம். நீங்கள் செய்யும் உதவி எப்படிப்பட்டதாக இருந்தாலும் அது மிகப் பெரியது. காரணம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் சிறு உதவிகளும் கூட இன்று அவர்களது உயிர் காக்கும் உதவியாக மாறியிருக்கிறது. எனவே நீங்கள் செய்யும் எந்த வகையான உதவியாக இருந்தாலும் புகைப்படத்துடன் எங்களுக்குத் தெரிவியுங்கள். வீடியோ இருந்தால் அதையும் அனுப்புங்க. இதைப் பார்த்து மேலும் பத்து பேர் உதவிக்கு வந்தால் அது நல்லதுதானே.
ஒருவருக்கொருவர் தைரியம் சொல்லிக் கொள்வோம்.. உதவிக் கரம் நீட்டுவோம்.. உயிர் காப்போம்.. ஒருவரை ஒருவர் அரவணைப்போம். நம்மை நாமே பாதுகாப்போம்
உங்களது உதவி மற்றும் விவரங்களை அனுப்ப வேண்டிய முகவரி: [email protected]