தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் பாலியல் தொல்லை.. உடைத்து பேசிய குட்டி பத்மினி! பகீர் தகவல்
சென்னை: மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லை குறித்து வெளியான ஹேமா கமிட்டி ரிப்போர்ட் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் தமிழ் சினிமாவுக்கும் இதுபோன்ற கமிட்டி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே இது தொடர்பாகப் பிரபல நடிகை குட்டி பத்மினி சில ஷாக் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் புகார்கள் குறித்து வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதில் பல முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் மீதும் பாலியல் புகார்கள் தரப்பட்டன.

தமிழ் சினிமாவிலும் இதேபோல ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே பிரபல நடிகை குட்டி பத்மினி இது தொடர்பாக சில பரபர தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
குட்டி பத்மினி: தற்போது தமிழ் டிவி துறையில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாக இருப்பதாகக் கூறிய குட்டி பத்மினி, இதனால் பல பெண்கள் தற்கொலை கூடச் செய்து கொண்டு இருப்பதாகக் கூறி அதிர வைத்துள்ளார். பிரபல ஆங்கில டிவி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இது தொடர்பாக வெளிப்படையாகவே அவர் பேசியுள்ளார்.
கடந்த காலங்களில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பேசிய பாடகி சின்மயி மற்றும் நடிகை ஸ்ரீ ரெட்டி ஆகியோருக்கு தமிழ் சினிமா தடை விதித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தர். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "டாக்டர்கள், வழக்கறிஞர்கள், ஐ.டி. ஊழியர்களை போல நடிப்பதும் ஒரு தொழில் அவ்வளவுதான்.. ஆனால், இதை மட்டும் தவறாக பார்க்கிறார்கள்.
புகார் அளிக்க மறுப்பது ஏன்: டிவி சீரியல்களில் நடிக்கும் நடிகைகளிடம் இருந்து பாலியல் ரீதியாக இயக்குநர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் சில மோசமான விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள். பாலியல் துன்புறுத்தலை நிரூபிக்க ஆதாரம் இருப்பதில்லை என்பதாலேயே பல பெண்கள் புகார் செய்வதில்லை. இன்னும் சிலர் நடிகையாக நல்ல சம்பளம் கிடைப்பதால் இதைப் பொறுத்து கொள்கிறார்கள்.
தமிழ் சினிமா: யாராவது ஒருவர் தங்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பேசினால் அவர்கள் பாதகமான விளைவுகளைச் சந்திக்க நேர்கிறது. பாடகி சின்மயி மற்றும் நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். சினிமா துறையினர் அவர்களுக்கு மொத்தமாகத் தடையே விதித்துவிட்டனர்..
(டப்பிங் சங்கத்தில்) நடிகர் ராதாரவி சின்மயிக்கு தடை விதித்தார். உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்கவில்லை என்ற சொல்லி நடவடிக்கை எடுத்தார்கள். ஸ்ரீ ரெட்டிக்கு நடிகர் சங்க உறுப்பினர் அட்டை வழங்கப்படவில்லை. இதனால் அவரால் டிவி தொடர்களில் கூட நடிக்க முடியவில்லை.
விசாரணை இல்லை: தமிழ் சினிமாவில் பாலியல் துன்புறுத்தல் குறித்து அளிக்கப்பட்ட புகார்களில் விசாரணை உரிய முறையில் நடத்தி முடிக்கப்படவில்லை. பாலியல் அத்துமீறல் குறித்த கேள்விக்கு "ஆதாரம் எங்கே' என்று சுரேஷ் கோபி கேட்டதாகப் படித்தேன். பாதிக்கப்பட்ட நடிகைகள் ஆதாரத்துக்கு எங்கே போவார்கள்? வேண்டும் என்றால் சிபிஐ போல் உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்தலாம்" என்றார்.
குழந்தை நட்சத்திரமாக: மேலும், குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே தனக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்துள்ளதாகக் குட்டி பத்மினி கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "எனக்கு நேர்ந்த கொடுமை குறித்து என் அம்மா சண்டை போட்டார். இதனால் உடனடியாக அந்த இந்திப் படத்திலிருந்து என்னைத் தூக்கி விட்டார்கள். இப்படிப் பல சிரமங்கள் இருக்கும் போது ஆதாரத்திற்கு எங்கே போக முடியும்" என்று அவர் வேதனை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications