சென்னை ஏர்போர்ட்டில் சுற்றித் திரிந்த நபர்.. பேக்கை திறந்து பார்த்தால் ஷாக்.. 11 கோடிக்கு ஹெராயின்!
சென்னை: சென்னையில் ரூ. 11 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கத்தாரில் இருந்து வந்த இளைஞர் சென்னை விமான நிலையத்தில் சிக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக போலீசார் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனைகளில் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் சென்னைக்கு கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து சென்னை வந்த பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்துள்ளார். இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அவரது பேக்கை சோதனை செய்தனர். அப்போது 11 கிலோ எடை கொண்ட ஹெராயின் போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு 11 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த இளைஞரை கைது செய்த சுங்கத்துறையினர் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். போதைப்பொருளுடன் சென்னை ஏர்ப்போர்ட்டில் சிக்கிய இளைஞர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பாரத் வசிட்டா என்பது தெரிய வந்துள்ளது.
அதைத்தொடர்ந்து அந்த நபரிடம் போதைப்பொருள் யாருக்காக கடத்தி வரப்பட்டது? எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? இதற்கு யார் தலைமை என்பது தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications