ஸ்டாலினுக்கு குறுக்கே வந்த ஜெயக்குமார் மகன்.. நீதிபதிகள் கேட்ட ஒரே கேள்வி!
சென்னை: வழக்கை வாபஸ் பெற வேண்டும் என அரசு முடிவெடுத்தால் யாரிடம் அனுமதி பெற வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.பி ஜெ.ஜெயவர்த்தனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிகாலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்ற பின்னர், தலைமை செயலகம் சென்னை கோட்டைக்கு மாற்றப்பட்டது. புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டி, அது தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் 2011 டிசம்பரில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ரகுபதி ஆணையத்தை கலைத்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த ஆணையம் சேகரித்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் முந்தைய அதிமுக அரசு, விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்து முக ஸ்டாலின், துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து முந்தைய அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தன்னை இந்த வழக்கில் இணைக்கக் கோரி, அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அரசு முடிவெடுத்த பின், கடைசி நேரத்தில் வழக்கில் இணைக்கும்படி மூன்றாவது நபர் கோர முடியாது என்றும், இதுநாள் வரை வழக்கில் இணைக்க கோராத ஜெயவர்த்தன், வாபஸ் பெற முடிவு செய்த பின் வழக்கில் இணைக்க கோரியுள்ளது தவறு என்றும் மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அரசுக்கு உரிமை உள்ளது என்றார்.
தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், வழக்கை தாக்கல் செய்தவர் வாபஸ் பெறுவதாக இருந்தால் எதிர்மனுதாரர் கூட ஆட்சேபம் தெரிவிக்க முடியாது என்ற நிலையில், மூன்றாம் நபர் எப்படி எதிர்க்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.
முந்தைய ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் தொடர்பான புகார்கள் உள்ளன. மனுதாரரின் தந்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக வாக்கி டாக்கி கொள்முதல் ஊழல் புகார் உள்ளதாகவும் குறிப்பிட்டார். நீதிபதி ரகுபதி ஆணையத்தின் அறிக்கையை அரசு ஏற்காத நிலையில் அதன் பரிந்துரைகளை ஆதாரமாக கருத முடியாது என்றார்.
ஜெயவர்த்தன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, பொதுநலன் சம்பந்தப்பட்ட இந்த வழக்கை எப்படி வாபஸ் பெற முடியும்? உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ததால் நீதிமன்றத்தை அணுகவில்லை என்றும், தற்போது அரசு எந்த காரணமும் தெரிவிக்காமல் வாபஸ் பெறக் கோருவதால் வழக்கில் இணைக்க கோருவதாக குறிப்பிட்டார்.
அப்போது நீதிபதிகள், மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அரசு முடிவு செய்தால் யாரிடம் அனுமதி பெற வேண்டும் என ஜெயவர்த்தன் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு, இந்த மாநிலத்தின் குடிமகன் என்ற முறையில் கோரிக்கை வைப்பதாகவும், 2023ம் ஆண்டு ஜூலை மாதம் தான் வழக்கை வாபஸ் பெற அரசு முடிவெடுத்ததாகவும், அதற்கு முன் வாபஸ் பெறும் எண்ணம் இல்லாததால் வழக்கில் இணைக்க கோரவில்லை எனவும் விளக்கமளித்தார்.
இதையடுத்து, வாதங்களின் தொடர்ச்சிக்காக விசாரணையை பிப்ரவரி 6ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். நாளை தொடர்ந்து, இந்த வழக்கில் வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications