முதல்வர், துணை முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
சென்னை: தமிழக முதலமைச்சர். துணை முதல்வர் உள்ளிட்டோருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து மனுவை தள்ளுபடி செய்துள்ளது. முன்னதாக நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் பழிவாங்கும் நோக்கோடு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சத்தம் போட்டு வாதிட்டார். இதனால் கோபம் அடைந்த நீதிபதி இது சந்தை அல்ல, நீதிமன்றம் என கண்டித்தார். இதையடுத்து ரங்கராஜ நரசிம்மன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர், 'நமது கோவில்கள்' என்ற பெயரில் 'யூடியூப்' சேனல் வைத்துள்ளார். இதில் தமிழக முதல்வர்,துணை முதல்வர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறாக பேசியதாக ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்..

இந்த நிலையில் வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கு விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில், வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும் புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அப்போது ரங்கராஜன் நரசிம்மன் பழிவாங்கும் நோக்கோடு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சத்தம் போட்டு வாதிட்டார். இதனால் கோபம் அடைந்த நீதிபதி இது சந்தை அல்ல, நீதிமன்றம் என கண்டித்தார். இதையடுத்து ரங்கராஜ நரசிம்மன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.தொடர்ந்து இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி,புகாரை மேற்கொண்டு விசாரிக்க முகாந்திரம் உள்ளது என்றும் விரிவான உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
யார் இந்த ரங்கராஜன் நரசிம்மன்:
திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் தான் ரங்கராஜன் நரசிம்மன். கோவில்கள் சொத்துக்கள் பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடர்ந்து வருகிறார். கடந்த சில மாதங்கள் முன்பு துணை முதல்வர் உதயநிதி வீட்டுக்கு ஜீயர்கள் மூவர் சென்றதாகவும், அங்கு தோஷ நிவர்த்தி செய்ததாகவும் பரபரப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் அவரும், ஜீயரும் பேசிக் கொள்வது போல இருந்த அந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது
இந்நிலையில், தன் மீது அவதூறு பரப்பியதாக ஸ்ரீபெரும்புதூர் ஜீயர், ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது போலீசில் புகார் கொடுத்தார்.இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை அப்போது கைது செய்தனர். அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications