மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் கல்லூரி! இந்துக்களுக்கு மட்டுமே பணி.. நீதிமன்றம் உத்தரவு
சென்னை: மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயில் நிதியில் நடத்தப்படும் கல்லூரி பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பாணையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிதியில் கொளத்தூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி தொடங்க இந்து சமய அறநிலையதுறை முடிவு செய்தது.

அந்த கல்லூரிக்கு உதவியாளர்கள், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட பணியாளர்களை தேர்வு செய்ய நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுத்து கடந்த 2021ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், இந்து மதத்தை சர்ந்தவர்கள் மட்டுமே கல்லூரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்தும், இந்த அறிவிப்பானையை ரத்து செய்யக் கோரியும் சுகைல் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி விவேக் குமார் சிங் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி கல்வி நிறுவனம்தான், மத நிறுவனம் அல்ல என்பதால், மத அடிப்படையில் எந்த பணி நியமனங்களையும் மேற்கொள்ள முடியாது என்றும், எனவே தன்னை நேர்முக தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது.
அறநிலைய தரப்பில், இந்து அறிநிலைய துறை சட்டப்படி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியில் இருந்து கல்லூரி தொடங்கப்பட்டுள்ளதால் கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி மத நிறுவனம்தான் என வாதம் வைக்கப்பட்டது.
மேலும் கல்லூரியை நடத்த அரசிடம் இருந்து எந்த வித நிதியும் பெறவில்லை என்றும் இது சுயநிதி கல்லூரி என்பதால் பணி நியமனங்களில் இந்து மதத்தை சார்ந்தவர்களை மட்டுமே நியமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கோவில் நிதியில் இருந்து நடத்தப்படும் சுயநிதி கல்லூரி என்பதால், இந்து அறநிலையத் துறை சட்டப்படி, இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே கல்லூரி பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்க முடியும் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications