நயினார் நாகேந்திரன் தலைக்கு மேல் கத்தி.. தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு ஐகோர்ட்டில் நாளை விசாரணை!
சென்னை: திருநெல்வேலி லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீதான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும்,
அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிய மனுவை நாளை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பேர் 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் புரசைவாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணியாற்றும் சதீஷ், நவீன், லாரி டிரைவர் பெருமாள் என்பது தெரியவந்தது.
மேலும், அவர்கள் பாஜக நெல்லை லோக்சபா தொகுதி வேட்பாளரும் எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திருநெல்வேலி தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நான்கு கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறையிடம் மனு அளித்ததாக கூறியுள்ளார்.
ஆனால், அந்த மனு மீது அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார். மேலும், வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததால் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு அளித்ததாகவும் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் ராகவன் சார்பில் வழக்கறிஞர் இம்மானுவேல் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த மனுவை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.
நாளை மறு நாள் (ஏப்ரல் 19) தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications