PFI பத்தாது.. எஸ்டிபிஐ கட்சியையும் தடை செய்யுங்க! வீரமணிக்கு நன்றி சொல்லி அர்ஜுன் சம்பத் கோரிக்கை
சென்னை: எஸ்டிபிஐ மற்றும் பிஎஃப்ஐ போன்ற அமைப்புகள் குறித்து தமிழக ஆளுநர் பேசியது முற்றிலும் உண்மை என்றும் இந்த அமைப்புகளை தடைசெய்ய வேண்டுமென்றும் இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
தென்னிந்திய பார்வாடு பிளாக் கட்சியின் தொண்டரணி மாநிலத்தலைவர் சபரியின் இல்ல காதணி விழாவில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை மாநகராட்சி கூட்டத்தின்போது செய்தியாளர்களை தாக்கிய திமுகவினரின் செயல் கண்டிக்கத்தக்கது என்றார்.
வீரமணிக்கு நன்றி
"குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே தெரிந்த திருவாடுதுறை ஆதினத்தின் பட்டினபிரவேசம் நிகழ்ச்சி தற்போது நாடு முழுவதும் தெரியும் வகையில் பரப்பிய திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனி அரசு ஆன்மிக விஷயங்களில் தலையிடக்கூடாது. சென்னையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் வீடுகள் இடிக்கப்பட்டதாக தெரிவிக்கும் தமிழக அரசு முறையான மாற்று ஏற்பாடுகளை செய்யாமல் எடுத்த நடவடிக்கையே இது.
இலங்கை மக்களை காக்க வேண்டும்
இலங்கையில் தமிழின படுகொலையை நிகழ்த்திய ராஜபக்சே குடும்பத்தையே அங்கு வாழமுடியாத நிலைக்கு சிங்கள மக்களே தள்ளியுள்ளனர். இலங்கை மக்களை இந்திய அரசு காக்க முயற்சி எடுக்கவேண்டும். ஆனால் ஊழல் அரசியல்வாதிகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தொடர் முழுக்க முழுக்க பயனில்லாத கூட்டத்தொடராக அமைந்தது. சட்டமன்றத்தை தங்களது அரசியல் பிரச்சார மேடையாக திமுக அரசு மாற்றியுள்ளது.
எஸ்.டி.பி.ஐ, பி.எப்.ஐ அமைப்புகளை தடைசெய்ய வேண்டும்
தொடர்ந்து பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கும் விதமாக நடக்கும் திமுக அரசு, தொடர்ந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதை மாற்றிக்கொள்ளும் வரை இனி பிரிவினைவாத திமுக என்றே அழைப்போம். எஸ்டிபிஐ மற்றும் பிஎஃப்ஐ போன்ற அமைப்புகள் குறித்து தமிழக ஆளுநர் பேசியது முற்றிலும் உண்மை. இந்த அமைப்புகளை தடைசெய்ய வேண்டும். வருகிற மே18ம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் குளக்கரையில் இறந்தவர்களுக்கு தமிழர் மரபுப்படி திதி கொடுக்க உள்ளோம்.
அண்ணாமலையால் மீனவர்கள் விடுதலி
இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் கலந்துகொள்வதை மக்கள் புரிந்து கொண்டார்கள். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு நேரடியாக சென்று அங்கு சிறையில் பல ஆண்டுகளாக அடைபட்டுக்கிடந்த தமிழக மீனவர்களை பாஜக சந்தித்து வந்ததன் பலனாக இன்று தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பாஜக வால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம். தமிழீழ மக்களை வைத்து அரசியல் செய்யும் வைகோ, சீமான் போன்றவர்களால் முடியாது.
ஜாக்டோ ஜியோவை தடை செய்ய வேண்டும்
திமுக தேர்தல் வாக்குறுதியில் அளித்த பழைய ஓய்வுதியதிட்டத்தை தற்போது நடைமுறைப் படுத்தமுடியாது என்று அறிவித்துள்ள நிலையில், அதிமுக ஆட்சியில் இதை தெரிவித்தபோது போராடிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தற்போது என்ன செய்கிறார்கள்? கம்யூனிச சித்தாந்தத்தில் செயல்படும் ஜாக்டோஜியோ அமைப்பை தடைசெய்ய வேண்டும்.
பவர்கட் பாலாஜி
தமிழகத்தில் ஏற்படும் மின்வெட்டு செயற்கையானது. பவர்கட் பாலாஜியின் தவறான செயல்பாடே காரணம். இது ஊழலுக்கான அச்சாரம்தான். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பதாக முதலமைச்சர் கூறும்வேளையில் காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடந்திருப்பதே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போனதற்கான சாட்சி." என்றார்.