ஒரு ஸ்ட்ராங் பரிந்துரை.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சூர்யா தப்பியது எப்படி?
சென்னை: சில தினங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது நடிகர் சூர்யா வெளியிட்ட நீட் தொடர்பான ஒரு அறிக்கை.
நீதிமன்றங்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தீர்ப்பு வழங்கும் நிலையில், மாணவர்களை மட்டும் தேர்வு எழுத வர சொல்வது நியாயமா என்ற தொனியில் அந்த அறிக்கையில் சூர்யா கேள்வி எழுப்ப அது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, நீதிபதி சுப்பிரமணியம் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், சூர்யாவின் கருத்துக்கள் நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்றத்தின் மாண்புக்கு எதிராக இருப்பதாக எனவே சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து நீதிமன்ற மாண்பை காக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நீதிமன்ற அவமதிப்பு
இதையடுத்து, சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுமோ என்ற பரபரப்பான சூழ்நிலை உருவானது. ஆனால் இதற்கு நடுவே, முன்னாள் நீதிபதிகள், சந்துரு, சுதந்திரம், ஹரிபரந்தாமன், அக்பர் அலி மற்றும் கண்ணன் ஆகியோர் தலைமை நீதிபதிக்கு, ஒரு கடிதம் எழுதினர். சூர்யா மீதான குற்றச்சாட்டை பெருந்தன்மையாக கடந்து செல்லலாம் என்று கேட்டுக் கொண்டனர்.

அடுத்து என்ன
இவ்வாறு இரு தரப்பில் இருந்து தலைமை நீதிபதிக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த விஷயத்தில் தமிழக தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் என்ன கருத்து கூறுகிறாரோ அதை ஏற்று அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க உயர்நீதிமன்றம் ஆயத்தமானது. நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அனுப்பிய கடிதம் கடந்த 14 ஆம் தேதி தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்து கேட்புக்காக அனுப்பப்பட்டது.

தமிழக அரசுக்கு பாராட்டு
இந்த நிலையில் சூர்யா தனது ட்விட்டர் தளத்தில் மற்றொரு ட்வீட் வெளியிட்டார். அதில் தமிழக அரசு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு செய்துள்ளதற்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மாணவர்களுக்கு துணை நிற்போம்... ஒன்றிணைந்து செயல்படுவோம்... இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

பரிந்துரை
சூர்யா வெளியிட்ட இந்த ட்விட் ஆளும் கட்சியினரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் சூர்யா மீது நடவடிக்கை தேவை இல்லை என்று தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணனும் பரிந்துரை செய்துள்ளார். இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து சூர்யா தப்பியுள்ளார்.

முக்கியம்
ஒருவேளை மாநில தலைமை வழக்கறிஞர் இந்த விஷயத்தில் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்று பரிந்துரை செய்திருந்தால் அவர் சிக்கலில் மாட்டி இருக்கக்கூடும். அந்த வகையில் தலைமை வழக்கறிஞரின் பரிந்துரை என்பது இந்த வழக்கில் மிகவும் முக்கிய அம்சம் பிடித்துள்ளது என்கிறது நீதிமன்ற வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications