முதல் பக்க விளம்பரம்.. மூன்றாவது இடத்தில் நாம் தமிழர்.. அதிமுக செம போட்டி கொடுக்கும் பின்னணி இதுதான்
சென்னை: கேக்கில் கத்தி வைத்ததுபோல, திமுகவுக்கு, தமிழக சட்டசபை தேர்தலில் எளிதான வெற்றி கிடைக்கும் என்பது தான் பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகளில் சாராம்சமாக இருந்தது.
ஆனால், தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிரெண்ட்டை பார்த்தால் கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கும் ரிசல்ட்டுக்கும் சம்மந்தம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
ஒருவேளை திமுக ஆட்சியை பிடித்தாலும், அதிமுகவுக்கு கவுரவமான தோல்வியாகத்தான் இருக்குமே தவிர, திமுகவுக்கு கவுரவமான வெற்றி என்று சொல்லிவிட முடியாது.

முதல் பக்க விளம்பரம்
10 வருடங்கள் தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும் அதிமுக, திமுகவுக்கு கடுமையான போட்டியை கொடுப்பதற்கு சில முக்கிய காரணங்கள் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதில் ஒரு முக்கியமான காரணம் தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் அதிமுக கொடுத்த முதல் பக்க விளம்பரம். அந்த விளம்பரத்தில் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பல்வேறு செய்தி வடிவிலான விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.

திமுக ஆட்சி மீது விமர்சனம்
முந்தைய திமுக ஆட்சி காலத்தில் எது எது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட குற்றச்சாட்டுகளோ, அவை அனைத்தையும் தொகுத்து செய்தி போல விளம்பரமாக வெளியிட்டது அதிமுக. கடைசி நேரத்தில் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை அந்த விளம்பரங்கள் ஏற்படுத்தியதாக பல்வேறு அரசியல் விமர்சகர்களும் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு ஆகியவை அந்த விளம்பரங்களில் திமுகவுக்கு எதிராக மிக முக்கியமாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஆகும்.

நாம் தமிழர் கட்சி
இன்னொரு விஷயம் என்னவென்றால், நாம் தமிழர் கட்சி பல்வேறு பகுதிகளிலும் பரவலாக வாக்குகளைப் பெற்றுள்ளது. கணிசமான தொகுதிகளில் அந்த கட்சி 3வது இடம் பிடித்துள்ளது. இந்த தேர்தலில் முதல் முறை வாக்களிக்க கூடிய இளைஞர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. அவர்களில் கணிசமான வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு சென்று உள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஓட்டுக்கள் பிரிந்தன
முதலிடத்தை பிடிக்கவில்லை என்ற போதிலும் மூன்றாவது இடம் பிடித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடாவிட்டால் எந்த கட்சிக்கு ஓட்டு போடுவார்கள் என்ற கேள்வி அந்த கட்சிக்கு ஓட்டு போட்ட இளைஞர்களிடம் ஒரு கருத்துக் கணிப்பு நிறுவனத்தால் முன்வைக்கப்பட்டதாகவும், அதில் 70 சதவீதம் அளவுக்கான புதிய வாக்காளர்கள் , நாங்கள் திமுகவுக்கு ஓட்டுப் போட்டு இருப்போம் என்று சொல்லி இருப்பதாகவும் சுட்டிக் காட்டுகிறார் ஒரு மூத்த பத்திரிக்கையாளர். அதாவது , திமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு திரும்பி உள்ளது என்பது தான் இதன் பொருள் ஆகும்.

மக்கள் நீதி மய்யம்
கமல்ஹாசன் தலைமைதான் மக்கள் நீதி மய்யம் கட்சியும் கணிசமான வாக்குகளை திமுகவுக்கு செல்லவிடாமல் தங்கள் பக்கம் திருப்பியுள்ளது. அதேநேரம் தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி, சசிகலாவின், ஆதரவு இல்லாததால் அதிமுக ஓட்டுகளை பெரிய அளவுக்கு பிரிக்க முடியவில்லை என்று தெரிகிறது.

எடப்பாடியார் செல்வாக்கு
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட செல்வாக்கும் அதிமுகவுக்கு வாக்குகளை பெற்றுக்கொடுத்துள்ளது. கொங்கு மண்டலத்தில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் இருப்பது இதற்கு ஒரு நல்ல உதாரணம். கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ நுழைவுத் தேர்வில் இட ஒதுக்கீடு, காவிரி விவகாரத்தில் சிறப்பாக கையாண்டு தண்ணீர் பெற்றுத்தந்தது, சட்டம் ஒழுங்கை சிறப்பாக பேணியது , உள்ளிட்டவற்றால் எடப்பாடி பழனிசாமி மீது மக்கள் மத்தியில் செல்வாக்கு உயர்ந்துள்ளது. அதிமுக இந்த தேர்தலில் கடும் போட்டி கொடுப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம்.

வன்னியர் ஓட்டுக்கள்
எடப்பாடி பழனிசாமி நினைத்தது போலவே வடக்கு மண்டலத்தில் வன்னியர் வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு சிந்தாமல், சிதறாமல் வந்துள்ளன. கடைசி நேரத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது முதல்வரின் முக்கிய தேர்தல் வியூகமாக பார்க்கப்பட்டது. அந்த வியூகத்திற்கு கை மீது பலன் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications