அதிகரித்த நீர்வரத்து.. திகைத்து போன அதிகாரிகள்.. அடையாறு பெரும் வெள்ளத்தில் இருந்து தப்பியது எப்படி?
சென்னை; செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று முன்தினம் இரவு 9 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நீர் வரத்து அடையாறு ஆற்றில் அதிகரித்தால் இரவு வரை காத்திருந்து நீர் வரத்து குறைந்த பின்னர் அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டது.
ஒருவேளை அடையாறு ஆற்றில் அதிக அளவு நீர் வரத்து தொடர்ந்து கொண்டே இருந்திருந்தால், செம்பரம்பாக்கம் ஏரியை திறந்த பின்னர் அதிக வெள்ளப்பெருக்கு அபாயம் இருந்தது. ஆனால் நல்ல வேளையாக அதிக அளவு நீர்வரத்து செம்பரம்பாக்கம் ஏரிக்கும் வரவில்லை.சென்னை அடையாறு ஆற்றில் அதிக அளவு வெள்ளமும் பாயவில்லை.
நிவர் புயல் காரணமாக கடந்த 23ம் தேதி முதல் பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 24 அடி கொள்ளவு கொண்ட ஏரியின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 21.55 அடியை எட்டியது. அப்போது ஏரிக்கு நீர் வரத்து 4 ஆயிரம் கனஅடியாக இருந்தது.
9 ஆயிரம் கனஅடி
இதனால் செம்பரம்பாக்கம் ஏரி நேற்றுமுன்தினம் பிற்பகல் 12 மணி அளவில் திறக்கப்பட்டது, அதன்பிறகு அன்று மாலை 3 மணி அளவில் 3 ஆயிரம் கனஅடி நீரும், மாலை 6 மணியளவில் 5 ஆயிரம் கனஅடி நீரும், இரவு 8 மணி அளவில் 7 ஆயிரம் கனஅடி நீரும், இரவு 10 மணி அளவில் 9 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டது.
ஆய்வு
இதனால் அடையாறு ஆற்றில் ஒரே நேரத்தில் 30 ஆயிரம் கனஅடி நீர் சென்றதாக கூறப்படுகிறது. வெள்ளம் கரைபுரண்டு ஓடியது சேதம் ஏற்படாத அளவிற்கு கரைகளை ஆய்வு செய்து அதிகாரிகள் நீரை வெளியேற்றினர். பின்னர் மழை குறைந்ததால் நீர் வரத்தும் குறைந்தது. இதனால்நள்ளிரவில் 5 ஆயிரம் கனஅடி நீரும் அதன்பின்னர் நேற்று காலை 2 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டது. படிப்படியாக 1500 கனஅடியாக நீர் வரத்து குறைந்தது. 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பின்னர் மாலையில் 1500 கனஅடி வரை திறக்கப்பட்டது. நீர் வரத்துக்கு ஏற்ப தண்ணீரை திறந்து வருகிறார்கள்.
நீர்வரத்து
செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று முன்தினம் 10மணி அளவில் 8436 கனஅடி நீர் வந்தது. இதனால் ஏரியில் இருந்து 9 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. மேலும் நீர் வரத்து அதிகரிக்குமோ என்று அப்போது அதிகாரிகள் அச்சத்தில் இருந்தனர். ஏனெனில் நீர் வரத்து அதிக அளவு வந்தால் கரைகள் உடைப்பு ஏற்படும்.
முடிச்சூர்
இது ஒருபுறம் எனில் அடையாறு ஆறு 2.5 ஆழம் தான் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆற்றுக்கு பல்வேறு குளம் மற்றும் ஏரிகளில் இருந்து திறக்கப்பட்ட நீர் அடையாறு ஆற்றின் உயரத்தை விட அதிக அளவு பாய்ந்து வந்தன. இதனால் முடிச்சூர், வரதராஜபுரம், தாம்பரம் பகுதி குடியிருப்புகள் தண்ணீரில் தத்தளித்தன.
காத்திருந்தனர்
அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால் பாதிக்கும் என்று அதிகாரிகள் திகைப்பில் இருந்தனர். இதனால் அடையாறு ஆற்றில் நீர் வரத்து குறையும் வரை காத்திருந்து இரவில் அதிக அளவு நீரை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிட்டனர். இதனால் பெரிய பாதிப்பு சென்னையில் ஏற்படவில்லை.