ஆலோசனையே வேண்டாம்.. நானே இறங்குறேன்.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்கள்.. இதுவரை இப்படி நடந்ததே இல்லையே
சென்னை: தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிரடியான சில மாற்றங்களை செய்துள்ளார். இதுவரை தமிழக அரசியலில் பொதுவாக நடக்காத ஒரு விஷயம் இன்று அதிகாரிகள் மாற்றத்தில் நடந்து உள்ளது.
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் மிகப்பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இங்கே விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67ஆக உயர்ந்திருக்கிறது.

கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இப்படி குடித்தவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம், நெஞ்செரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கிறது. எனவே உறவினர்கள் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். இவர்கள் அடுத்தடுத்து பலியானார்கள்.
அடுத்த சம்பவம்: இந்த சம்பவத்தின் ஈரம் காயும் முன் தற்போது சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு உள்ளார். இவரின் கொலை நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக தேசிய அளவில் தலித் அமைப்புகள் இடையே கடுமையான எதிர்ப்புகளை இந்த விவகாரம் ஏற்படுத்தி உள்ளது.
அதிகாரிகள் மாற்றம்: சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேநேரம், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் இருவரும் திறமையான அதிகாரிகள். அதிலும் அருண் இளமையான துடிப்பான அதிகாரி. இன்னொரு பக்கம் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஏற்கனவே உளவுத்துறையில் நல்ல பெயர் எடுத்தவர்.
அதோடு இன்று தமிழ்நாடு காவல்துறையில் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (வடக்கு) அஸ்ரா கர்க் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு நரேந்திரன் நாயர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு கண்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
வடக்கு மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு அஸ்ரா கர்க் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தெற்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஸ்டாலின் முடிவு: இந்த விவகாரத்தில் ஸ்டாலின் சுயமாக முடிவெடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதாவது இவர்களை தேர்வு செய்ய ஸ்டாலின் யாரிடமும் ஆலோசனை செய்யவில்லை. அவராகவே தேர்வு செய்தவர்கள்தான் இவர்கள் எல்லோரும். இவர்களை கைப்பட டிக் அடித்து ஸ்டாலின் பணியிட மாற்றம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படி இதுவரை தமிழக அரசியலில் பொதுவாக நடக்காத விஷயம் இன்று அதிகாரிகள் மாற்றத்தில் நடந்து உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications