ஆளுநர் இல்லைன்னு சொன்னாரே.. காத்திருந்து தூக்கிய ஸ்டாலின்.. தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டது எப்படி?
சென்னை: சிதம்பரத்தில் குழந்தை திருமணம் நடக்கவில்லை என்று ஆளுநர் ஆர். என் ரவி கூறிய நிலையில் முறையான ஆதாரங்களை வைத்து போலீசார் தீட்சிதர்களை கைது செய்துள்ளனர்.
சிதம்பரம் தீட்சிதர்கள் 4 குழந்தை திருமணத்தை செய்து வைத்ததாக புகார் எழுந்துள்ளது. இதில் ஒரு குழந்தை திருமணத்தில்தான் தற்போது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள குழந்தை திருமணத்தில் விசாரணை நடைபெற்று கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் தனது மகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் வைக்கப்பட்டது. கடந்த வருடம் தனது மகளுக்கு 13 வயதே இருக்கும் போது குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளார்.
கடந்த வருடம் 15 வயது சிறுவனுடன் அந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். கடந்த வருடம் இந்த திருமணம் நடந்த நிலையில் இந்த வருடம்தான் அந்த விஷயம் வெளியே தெரிய வந்துள்ளது. சிறுமியை திருமணம் செய்த ராஜரத்தின தீட்சிதர் கைது செய்யப்பட்டார்.

அதேபோல் திருமணத்தை நடத்தி வைத்த மாப்பிள்ளையின் தந்தை வெங்கடேஸ்வரா தீட்சிதர் என்பவரும் கைது செய்யப்பட்டார். தற்போது இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரித்தால் உண்மை வெளியாகிவிடும் என்பதற்காக அந்த சிறுமியை அவர்கள் மறைத்து வைத்துள்ளனர். திருமண பதிவுகளை வைத்துதான் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.
திருமண மண்டபத்தில் 2021 ஜனவரி 25 அதிகாலையில் நடைபெற்ற திருமண பதிவை வைத்து, இந்த திருமணத்தை உறுதி செய்துள்ளனர். ஆனால் இது கூட பொய் என்று அவர்கள் சொல்ல வாய்ப்பு உள்ளதால் புகைப்பட ஆதாரங்களையும் கைப்பற்றி உள்ளனர்.
கொடுமை: இந்த சிறுமிக்கு திருமணம் செய்ததோடு மட்டுமின்றி போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக அந்த சிறுமியை ஒளித்து வைத்துள்ளனர். போலீசார் விசாரணைக்கு வந்த போது விசாரணை செய்ய விடாமல், சிறுமி ஊரில் இல்லை என்று கூறி, வீட்டிற்கு உள்ளேயே அறை ஒன்றில் ஒளித்து வைத்து உள்ளனர்.
இந்த வழக்கில் இவர்கள் மூவர் தவிர இன்னும் பலர் கைதாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கைதான் 3 பேரும் 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த கைதை கண்டித்து நேற்று இரவு தீட்சிதர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு போராட்டம் செய்தனர். சாலைகளில் பூசணிக்காய் உடைத்து தீட்சிதர்கள் போராட்டம் செய்தனர். ஹேமசபேச தீட்சிதரை விடுதலை செய்ய கோரி போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் அங்கே குவிக்கப்பட்டு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடலூர் மாவட்டத்தில் பதிவான 22 வழக்குகளில் 4 குழந்தை திருமண வழக்குகளில் 11 தீட்சிதர்களுக்கு நேரடி தொடர்பு உள்ளது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் எதையும் செய்யவில்லை, தமிழ்நாடு அரசு அவர்கள் மீது பழிவாங்கும் விதமாக நடவடிக்கை எடுக்கிறது என்று ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக டைம் ஆப் இந்தியா ஊடகத்திற்கு தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர். என் ரவி அளித்த பேட்டியில், கோவில்களை சிறப்பாக நிர்வகிப்பதற்காக நான் இந்த தமிழ்நாடு பாராட்ட வேண்டும் என்று அரசாங்கம் விரும்பியது. அதற்கு அவர்கள் கூறிய காரணம், 3,000க்கும் மேற்பட்ட ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டெடுத்ததுதான். அதை ஏற்றுக்கொள்கிறேன்.
அவ்வளவு நிலங்களை மீட்டது நல்ல விஷயம்தான். ஆனால் இன்னும் 50,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதை எல்லாம் மீட்கவில்லை. இதுவரை செய்யப்பட்ட மீட்பு மிகவும் சிறியதாக உள்ளது என்பதை எல்லோரும் அறிவோம். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2022ல் என்ன நடந்தது என்று பாருங்கள்.
பழிவாங்கும் வகையில், சமூக நலத் துறையின் அரசு அதிகாரிகள், பொது தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். அங்கே குழந்தைத் திருமணங்கள் நடப்பதாக எட்டு பேர் மீது புகார்களை அளித்தனர். தீட்சிதர்கள் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று புகார் வைத்தனர்.
ஆனால் அங்கே அத்தகைய திருமணங்கள் நடக்கவில்லை. அது உண்மை இல்லை. பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், ஆறாம், ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை, வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, 'இரண்டு விரல் பரிசோதனை' என்னும் கன்னித்தன்மை பரிசோதனை செய்து உள்ளது.
இந்த கொடுமைகளால் அந்த சிறுமிகள் சிலர் தற்கொலைக்கு முயன்றனர். இது என்ன என்று கேட்டு முதல்வருக்கு கூட நான் விளக்கம் கேட்டு கடிதம் எழுதினேன். இப்போது, நடக்கும் அனைத்திற்கும் பின்னணியில் இருப்பது அரசுதான். நான் இந்த அரசாங்கத்தைப் பாராட்ட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? என்று ஆளுநர் ஆர். என் ரவி கேட்டு உள்ளார்.
இந்த விவகாரத்தில் குழந்தை திருமணம் நடக்கவில்லை என்று ஆளுநர் ஆர். என் ரவி கூறிய நிலையில் முறையான ஆதாரங்களை தமிழ்நாடு அரசு , போலீஸ் பெற்றுள்ளது. அதாவது புகைப்பட ஆதாரங்கள், வீடியோ ஆதாரங்கள் போன்ற ஆதாரங்கள் எல்லாம் கிடைக்கப்பெற்ற பின் காத்திருந்து தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். தீட்சிதர்கள் குழந்தை திருமணம் தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தம் 11 பேர் மீது வழக்கு.
2 பேர் முன்னரே கைது செய்யப்பட்ட நிலையில்... இப்போது மீதம் உள்ள 9 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் எப்படி கைது செய்யப்பட்டனர் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளது. அதில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் தெற்கு ரதவீதியைச் சேர்ந்த பானுசேகர் என்பவரின் 17 வயது மகளுக்கும், சிதம்பரம் நகரைச் சேர்ந்த கபிலன் என்பவருக்கும் இருவீட்டார் இணைந்து கடந்த 03.06.2022 (17) அன்று எம்.எஸ்.திருமண மண்டபத்தில் திருமணத்தை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா என்பவர் 20.06.2022 அன்று சிதம்பரம் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டம் 2006ன்படி நான்கு எதிரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதேபோன்று, கடலூர் மாவட்டம், சிதம்பரம் வடக்கு ரதவீதியைச் சேர்ந்த கணபதி என்பவரின் 15 வயது மகளுக்கும். அதே பகுதியைச் சேர்ந்த பசுபதி (19) என்பவருக்கும் இருவீட்டார் இணைந்து கடந்த 09.02.2022 அன்று சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் திருமணம் நடத்தியுள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட மாவட்ட சமூக நல அலுவலர் தவமணி என்பவர் 21.09.2022 அன்று கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டம் 2006ன்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு. சோமசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
மற்றொரு நிகழ்வில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் கீழ ரதவீதியைச் சேர்ந்த ராஜகணேச தீட்சிதர் என்பவரின் 13 வயது மகளுக்கும், அதே பகுதி சன்னதி தெருவைச் சேர்ந்த தில்லை நாகராஜ ரத்தின தீட்சிதரின் மகன் பத்ரீச தீட்சிதருக்கும் (19) இருவீட்டார் இணைந்து கடந்த 25.01.2021 அன்று திருமண மண்டபம் ஒன்றில் திருமணத்தை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து தகவல் தெரியவந்ததன்பேரில் கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா என்பவர் 04.10.2022 அன்று கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டம் 2006ன்படி ஆறு எதிரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு. இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
தமிழக அரசு குழந்தைகள் நலனைப் பேணி பாதுகாக்கும் வகையில், கல்வி இடைநிற்றலைத் தடுக்கும் பொருட்டு அனைவருக்கும் கட்டாயக் கல்வி, பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குதல், இலவச பேருந்து பயண அட்டை, கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களை வழங்கி வருகிறது. மேலும், கல்வி அறிவைப் பெறுவதன் மூலம் தங்கள் உடல் நலம் காத்தல், குழந்தைத் திருமணம், வரதட்சணை ஒழிப்பு போன்றவைக் குறித்தும் குழந்தைகள் / பெண்கள் போதுமான விழிப்புணர்வு பெற்று வருகின்றனர்.
இருப்பினும், ஒரு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க முயலும் சம்பவங்கள் குறித்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைக்கப்பெற்ற உடன். அவர்கள் உள்ளூர் காவல் துறையினர் உதவியுடன் அப்பகுதிகளுக்கு சென்று குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தியும், பாதிக்கப்பட்ட சிறுமிகளை மீட்டும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டும் வருகின்றனர்.
மேலும், குழந்தை திருமணங்களைத் தடுக்க சமூக நலத்துறையினர் கிராமப்பகுதிகளில் அவ்வப்போது விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தி வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications