எச். ராஜா.. நாகேந்திரன்.. இல. கணேசன்.. சீனியர்களுக்கு மத்தியில் பாஜக தலைவரான அண்ணாமலை.. எப்படி?
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவராக பல சீனியர்களுக்கு மத்தியில் அண்ணாமலை தேர்வானது எப்படி என்று விவரங்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சர் ஆன நிலையில் தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். எல். முருகனுக்கு மீன்வளத்துறை மற்றும் விலங்குகள் நலத்துறை & தகவல் ஒளிபரப்புத் துறையின் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை 2019ல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பின் பாஜகவில் இணைந்தார். தமிழ்நாடு பாஜக துணை தலைவராக இருந்த அண்ணாமலை தற்போது தலைவராகி உள்ளது.

யார்
எல். முருகன் மத்திய இணை அமைச்சர் ஆன பின் தமிழ்நாடு பாஜகவின் தலைவர் யார் என்பது குறித்து நிறைய விவாதங்கள் நடந்தன. இதற்கான லிஸ்ட் ஒன்றை எல். முருகன் மேலிடத்தில் அளிப்பார், மேலிடத்தில் அந்த லிஸ்டை சோதனை செய்துவிட்டு இறுதி முடிவை எடுப்பார்கள் என்றெல்லாம் தகவல்கள் வந்தன. இதனால் புதிய தலைவரை தேர்வு செய்ய சில நாட்கள் ஆகலாம் என்று கருதப்பட்டது.

தமிழிசை
ஏனென்றால் தமிழிசைக்கு பின் எல். முருகனை நியமிக்க தேசிய பாஜக தலைமை பல நாட்கள் எடுத்துக்கொண்டது. நீண்ட இடைவெளிக்கு பின்பே இந்த நியமனம் செய்யப்பட்டது. இதனால் இந்த முறையும் அதேபோல் நீண்ட தாமதத்திற்கு பின், மேலிட ஆலோசனைகள், பரிந்துரைக்கு பின் புதிய தலைவர் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

ஆலோசனை
ஆனால் அப்படி எந்த ஆலோசனைகளும், தாமதமங்களும் செய்யாமல் நேரடியாக அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவர் ஆகியுள்ளார். எச். ராஜா. நயினார் நாகேந்திரன், இல கணேசன் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் பாஜகவில் உள்ளனர். இவர்களுக்கு இடையில் அண்ணாமலை திடீரென தலைவரானது எப்படி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு பின் நான்கு விஷயங்கள் நடந்து உள்ளன.

விஷயம் 1
முதலாவதாக எல். முருகன் மற்றும் 4 எம்எல்ஏக்கள் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த போதே புதிய தலைவருக்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. அப்போதே ஆலோசனைகள் எல்லாம் ஓவர் என்கிறார்கள். அப்போதே வானதி ஸ்ரீனிவாசன், எல்.முருகன் ஆகியோர் அண்ணாமலை பெயரை பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. தொடக்கத்திலேயே இவர் டாப் லிஸ்டில் வந்துவிட்டார்.

விஷயம் 2
இது போக, கர்நாடக பாஜகவை சேர்ந்த சிடி ரவி தமிழ்நாடு பாஜக பொறுப்பாளராக இருக்கிறார். இவர் அண்ணாமலைக்கு மிக மிக நெருக்கமானவர். கர்நாடகாவில் போலீசாக இருந்த போது ஏற்பட்ட நட்பு இது. அண்ணாமலை ஒரு வகையில் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வரவே சிடி ரவிதான் காரணம். இந்த நிலையில்தான் அண்ணாமலையை தமிழ்நாடு தலைவராக்க இவர் தீவிரமாக சிபாரிசு செய்ததாகவும் கூறப்படுகிறது.

விஷயம் 3
இது போக அண்ணாமலை பிரதமர் மோடி, அமித் ஷாவின் குட்புக்கில் இருக்கிறார். பாஜக எப்போதும் சில மாநிலங்களில் நிகழ்காலத்தை விட எதிர்காலத்தை மனதில் வைத்தே திட்டங்களை வகுக்கும். அந்த வகையில் சீனியர்களை விட அண்ணாமலையை தலைவராக்கினால் மட்டுமே எதிர்கால தேர்தல்களில் பாஜக தமிழ்நாட்டில் வலுவாக காலூன்ற முடியும் என்று நினைக்கிறது. இதனால் நேரடியாக மோடி, அமித் ஷா ஆகியோர் வேறு பெயர்களை கூட பார்க்காமல் அண்ணாமலையை டிக் அடித்ததாக தெரிகிறது.

விஷயம் 4
இதெல்லாம் போக கொங்கு பேக்டர் என்ற காரணமும் உள்ளது. அண்ணாமலை கொங்கு பகுதியை சேர்ந்தவர். பாஜக தமிழ்நாட்டில் வலுவாக உள்ள மண்டலங்களில் கொங்கு டாப்பில் உள்ளது. இதனால் அங்கிருந்துதான் தலைவர் வர வேண்டும் என்பதில் தேசிய மேலிடம் உறுதியாக இருந்துள்ளதாக தெரிகிறது. கோவையின் சிபி ராதாகிருஷ்ணனை இதற்கான லிஸ்டில் வைத்து இருந்தாலும், அவரை தலைவராக்க பெரிய அளவில் தேசிய தலைமை விரும்பவில்லை என்கிறார்கள்.

அண்ணாமலை
இதன்பின்தான் அண்ணாமலையை தலைவராக்குவதை உறுதி செய்துள்ளனர். அண்ணாமலை அனைத்து பாக்ஸையும் டிக் அடித்த காரணத்தால் அவருக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. துணை தலைவராகவும் இவரின் செயல்பாடு டெல்லி தலைமையை கவர்ந்ததாக கூறப்படுகிறது. இதன்பின்பே இவரை தமிழ்நாடு பாஜக தலைவர் தேசிய தலைவர் ஜே பி நட்டா அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications