தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம்.. நிர்வாகங்கள் செய்த 3 பெரும் தவறு.. சரி செய்ய ஒரு சான்ஸ் இருக்கு
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் கோயம்பேடு மார்க்கெட்.
Recommended Video
இதை சுகாதாரத் துறையே இன்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது. சீனாவில் எப்படி ஒரு வூஹான் மாகாணம், கொரோனா வைரஸ் பாதிப்பின் ஹாட்ஸ்பாட் என்பதாக மாறியதோ, அதுபோல தமிழகத்திற்கு கோயம்பேடு என்று மக்கள் அச்சத்தோடு சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
4 நாட்கள் முன்புவரை, சென்னை உட்பட, நான்கைந்து மாவட்டங்களில் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி வந்த நிலையில் கடந்த இரு தினங்களாக கட்டுப்பாட்டிலிருந்த பல மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது.
இதில் கடலூர் ஒரு முக்கியமான மாவட்டமாகும். பல நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பில்லாத இந்த மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 122 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சொந்த மாவட்டங்கள்
நேற்றும் நேற்று முன்தினமும் அங்கு பரவலாக பாதிப்பு ஏற்பட ஆரம்பித்தது. இது அத்தனைக்கும் காரணம் கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. அங்கு பணியாற்றிய பலரும் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு சென்று உள்ளனர். அவர்கள் மூலமாகத்தான் இப்படி மாவட்ட வாரியாக எண்ணிக்கை என்பது அதிகரித்துள்ளது.

இரு மடங்கு
தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு 527 பேருக்கு தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது. கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு விகிதம் என்பது, தமிழகத்தில், இரு மடங்காக உயர்ந்துள்ளது. அதாவது ஏப்ரல் 28ம் தேதியிலிருந்து கணக்கெடுத்து பார்த்தால் தமிழகத்தில் இரட்டிப்பாக பாதிப்பு அதிகரித்துள்ளது.

கோயம்பேடு முக்கிய காரணம்
கொரோனா பிரச்சினை அதிகரிக்கும்போது, கோயம்பேடு மார்க்கெட் திறந்திருக்க அனுமதி கொடுத்தது ஒரு தவறான முடிவு என்பது மட்டுமல்ல, ஆபத்தான முடிவு என்பதும் அரசு தரும் புள்ளிவிவரங்கள் மூலமே உறுதியாக தெரிகிறது. மேலும், திடீர் திடீரென ஊரடங்கு உத்தரவை முழு ஊரடங்கு என அரசு அறிவித்ததும், மக்கள் காய்கறி கடைகளை நோக்கி கூட்டம் கூட்டமாக படையெடுக்க ஒரு முக்கியமான காரணமாக மாறிவிட்டது.

எப்படிச் சென்றார்கள்
ஒரு பக்கம் அவசரம் என்று கூறி அடுத்த மாவட்டங்களுக்கு ஆஸ்பத்திரிகளுக்கு போவோர் கூட கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் நிலையில், இத்தனை நூற்றுக்கணக்கானபேர் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து எப்படி அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்றார்கள் என்ற கேள்வி எழுகிறது. இது தொடர்பாக நாம் விசாரித்தபோது, பலரும் காய்கறி ஏற்றி வந்த லாரி டிரைவர்களுக்கு 500 ரூபாய் லஞ்சம் கொடுத்து, காய்கறி லாரிகளில் மறைந்திருந்து சொந்த ஊர் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காய்கறி லாரிகளுக்கு அனுமதியுள்ளதால், அதை பயன்படுத்தி கோயம்பேடு தொடர்புள்ளோர் சொந்த ஊர்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

நடவடிக்கை தேவை
கோயம்பேடு மார்க்கெட்டை திறந்துவைக்க கூறி, நிர்வாகம் தவறு செய்தது ஒரு பக்கம் என்றால், பிரச்சினையின் முக்கியத்துவம் தெரிந்தும் கூட தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தாருக்கும், ஊர்க்காரர்களும் நோயை பரப்பிய பொதுமக்களின் மெத்தனப்போக்கு மற்றொரு பக்கம் என இரு பக்கமும் அடி வாங்கும் மத்தளம் போல மாறிவிட்டது தமிழகத்தின் நிலைமை.

சரி செய்யலாம்
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை திறக்க அனுமதித்தது, திடீர் திடீரென முழு ஊரடங்கு என அறிவித்து மக்களுக்கு உரிய கால அவகாசம் கொடுக்காதது, மாவட்டங்கள் இடையே போதிய போலீஸ் செக்கிங் செய்யாமல் தொழிலாளர்கள் இடம் பெயர அனுமதித்தது என மூன்று பெரும் தவறுகளை நிர்வாகங்கள் எடுத்ததன் விளைவு இப்போது தமிழகம் மோசமான பாதிப்பில் சிக்கியுள்ளது. இனியாவது அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, வீடுகளுக்கே காய்கறிகளை, சப்ளை செய்யும் நிலையை, சென்னையில் உருவாக்க வேண்டும். மற்ற மாவட்டங்களில் சென்னையில் இருந்து வருகை தந்தோர், தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மேலும் சென்னை உள்ளிட்ட அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு யாரும் செல்ல முடியாதபடி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.












Click it and Unblock the Notifications