காங்கிரஸ் இந்த முறை எத்தனை சீட் வெல்லும்! சின்ன கேப் விட்டு ப.சிதம்பரம் சொன்ன பளிச் பதில் இதுதான்
சென்னை: விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், இந்த முறை காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நமது நாட்டில் இந்தாண்டு மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் தொடங்கும் நிலையில், ஜூன் 1ஆம் தேதி கடைசிக் கட்ட தேர்தல் நடக்கிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த முறை தேசியளவில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி. தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.
ப.சிதம்பரம்: இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் பிரபல ஆங்கில செய்தி ஏஜென்சிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இந்தியக் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், நாடு முழுக்க இந்தியக் கூட்டணி செயல்பாடுகள் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
சிதம்பரம் மேலும் கூறுகையில், "இந்து மதத்திற்கோ அல்லது இந்துக்களுக்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை.. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் "இந்து விரோதிகள்" என்று சித்தரிப்பதும் பிரதமர் மோடியை இரட்சகராக முன்னிறுத்தவும் பாஜக பயன்படுத்தும் யுக்தி தான் இது. மற்றபடி நமது நாட்டில் என்றும் இந்துக்களுக்கு ஆபத்து இருந்தது இல்லை. இனி இருக்கப் போவதும் இல்லை.
எத்தனை இடங்கள்: அனைத்து மாநிலங்களிலும் என்ன நடக்கும் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் "இந்தியா" கூட்டணி அமோக வெற்றியைப் பதிவு செய்யும் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தான் அங்குள்ள மொத்த 20 இடங்களிலும் வெல்லும். பாஜகவால் ஒரு இடத்திலும் வெல்ல முடியாது. கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் உள்ள காங்கிரஸ் அரசுகளுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகம் இருக்கிறது.
எனவே, 2019ஆம் ஆண்டை விட காங்கிரஸ் அதிக இடங்களைப் பெறும் என்று என்னால் சொல்ல முடியும். காங்கிரஸ் இந்த முறை நல்ல வெற்றியைப் பதிவு செய்யும். இது தவிர ஹரியானா, உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் டெல்லியில் இந்தியா கூட்டணிக்கு நல்ல ஆதரவு இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்கம்: தொடர்ந்து மேற்கு வங்கம் குறித்துப் பேசிய அவர், "இந்தத் தேர்தலில் மம்தா பானர்ஜி நிச்சயம் ஒரு முக்கிய பங்கு வகிப்பார். மேற்கு வங்கத்தில் அவர் அதிகப்படியான சீட்களில் வென்றால் அது இந்தியா கூட்டணிக்கு மிகப் பெரிய பலனைத் தரும்" என்று அவர் தெரிவித்தார்.
கச்சத்தீவு மேட்டர்: கச்சத்தீவு விவகாரம் குறித்துப் பேசிய ப சிதம்பரம், "கச்சத்தீவு விவகாரம் என்பது முடிந்து போன ஒன்று.. 50 ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்ட ஒப்பந்தம் அது. மேலும், கடந்த 2014ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி பதவியில் இருந்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக ஏன் இந்தப் பிரச்சினையை எழுப்பவில்லை. ஆனால், தேர்தல் நெருங்கும் போது பாஜக இந்த விவகாரத்தை எழுப்பி உள்ளனர். இது சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications