ஜல்லிகட்டு போராட்டத்தின்போது ஓபிஎஸ் செய்த “சித்து விளையாட்டு! ஒரு பிளாஷ்பேக்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்ற போது ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் நடந்தன. மிகப் பெரிய அளவிலான இந்த போராட்டத்தை ஓபிஎஸ் எப்படி கையாண்டார் என்பது குறித்தும் இதை அவரது கட்டுப்பாட்டில் இருந்த போலீஸார் வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டு போராட்டக்காரர்கள் மீது பழி போட்டது குறித்தும் பார்க்கலாம்.
முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நல குறைவால் 75 நாட்கள் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். ஜெயலலிதா சில வழக்குகளை எதிர்கொண்ட போதெல்லாம் இடைக்கால முதல்வராக ஓபிஎஸ்ஸை நியமித்திருந்தார்.

அதை போல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் முதல்வரானார். அப்போது தான் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு தடை விதித்தது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடையை நீக்கக் கோரி 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் பெரும் அளவில் நடைபெற்றன.
மெரினா கடற்கரையில் இளைஞர்கள் தலைமையில் அமைதியான போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் ராகவா லாரன்ஸ், விஜய் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
லட்சக்கணக்கான மக்கள் அமைதியாக போராடினர். குழந்தைகள், பெரியவர்கள் என இந்த போராட்டத்திற்கு ஏராளமானோர் ஆதரவு கொடுத்தனர். அவர்களை பலமுறை கலைந்து போக சொல்லி கேட்டும் அவர்கள் கலைந்தபாடில்லை.
இந்த நிலையில் ஜனவரி 23-ஆம் தேதி அன்று போலீஸார் காலையில் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது வன்முறை வெடித்தது. அப்போது, சென்னையில் ஐஸ் ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன் அருகே வாகனங்கள் தீ வைக்கப்பட்டன.
சில வீடியோக்களில் போலீஸ் அதிகாரிகள் ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைப்பது பதிவாகியது. இவை சமூக வலைதளங்களில் வைரலானது. கமல் ஹாசன் உள்ளிட்டோர் இதைப் பகிர்ந்து கண்டனம் தெரிவித்தனர்.
அதேசமயம், போராட்டக்காரர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அப்போதைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (OPS), "தீய சக்திகள், அத்துமீறியவர்கள்" போராட்டத்தை கடத்தி வன்முறை ஏற்படுத்தியதாகக் கூறினார்.
போலீஸ் வாகனங்கள், பொதுச் சொத்துகள் சேதமடைந்ததற்கு போராட்டக்காரர்களே காரணம் என அரசு தரப்பு வாதிட்டது. ஐஸ் ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைக்கப்பட்டது, கற்கள் வீசப்பட்டது போன்ற சம்பவங்களை "சமூக விரோத சக்திகள்" செய்ததாகக் குறிப்பிட்டார்.
போலீஸார் கண்ணீர் புகை குண்டுகள், தடியடி நடத்தினர். பலர் காயமடைந்தனர். பின்னர், தமிழ்நாடு அரசு அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையம் பின்னர் போலீஸ் நடவடிக்கையை நியாயப்படுத்தியது.
இருப்பினும், போலீஸாரே வாகனங்களுக்கு தீ வைத்து, அதை போராட்டக்காரர்கள் மீது சுமத்தியதாக பலர் குற்றம்சாட்டினர். இது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அரசுக்கு எதிராக போராட்டங்களின் போது மெரினா நோக்கி யாராவது வந்தாலே ஜல்லிக்கட்டு போல் பெரும் போராட்டம் நடந்து விடும் என்பதால் போலீஸார் அவர்களை அனுமதிப்பதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications