திமுக ஆட்சி தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன?.. அது என்ன ‘திராவிட மாடல்’ ?
சென்னை: 'திராவிட மாடல்' என்பது இன்றைய ட்ரெண்ட் ஆக இருக்கிறது. ஆனால், அப்படி ஒரு பெயர் வைப்பதற்கு முன்பாகவே பல முன்னோடி திட்டங்களைத் திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் செயல்படுத்தி இருக்கிறது.
ஆனால், அந்தத் திட்டங்கள் பற்றி எல்லாம் இன்றைய இளம் தலைமுறைக்கு ஒன்றும் தெரிவதில்லை. பிறமாநிலங்களின் வளர்ச்சிக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாமல் விமர்சனத்தை மட்டும் முன்வைக்கிறார்கள்.

திராவிட மாடலுக்கு முன்!
'திராவிட மாடல்' ஆட்சிக்கு முன்பே திமுக என்னென்ன தனித்துவமான திட்டங்களைச் செயல்படுத்தி இந்தியாவிற்கே முன்னோடியாக இருந்திருக்கிறது? இதுவரை அதிகம் பேசப்படாத முன்னோடி திட்டங்கள் என்ன?
முக்கியமாக முதலில் சொல்ல வேண்டிய முன்னோடித் திட்டம் மாநில அரசின் பொது விநியோகத் திட்டம். இதன் கீழாகத்தான் நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றன.
இந்த அனைவருக்குமான பொதுவிநியோக திட்டமானது தமிழ்நாட்டில்தான் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இம்மாதிரி ஒரு திட்டம் இல்லை. நம் மாநில அரசுதான் மிகச் சிறப்பாக இதைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது.

1970களுக்குப் பிறகுதான் இந்தப் பொதுவிநியோகத் திட்டம் பரவலாக்கப்பட்டது. அதற்கு முன்னால் சென்னை, கோவை என சில நகரங்களில் மட்டும் இத்திட்டம் செயல்பட்டது.
அண்ணாதுரைகூட 'ரூபாய்க்கு ஒரு படி அரிசி' திட்டத்தைச் சென்னையில்தான் அறிமுகப்படுத்தினார். பின்னர் கோவைக்கும் விரிவாக்கினார். ஆனால், 70களுக்குப் பின்னர், குறிப்பாக மு கருணாநிதி ஆட்சிக்குப் பின்னர் கிராமப் புறங்களிலும் பொதுவிநியோக திட்டம் கொண்டு போய் சேர்க்கப்பட்டது.
மு.கருணாநிதிதான் முன்னோடி!
1969இல் மு.கருணாநிதி முதலமைச்சரான பின் 1972இல் தமிழ்நாடு பொதுவிநியோக கழகத்தைத் தொடங்கினார். 1975 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் குடும்ப அட்டைகளை வழங்கினார். அதற்கு முன்பாக கிராமங்களில் ரேஷன் கார்டு என்பதே இல்லை.
இதன் இன்னொரு வடிவமாக மு.கருணாநிதிதான் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டத்தைக் கொண்டு வந்தார். அப்படியான ஒருவகுப்பினரைப் பற்றி வேறு எந்த அரசியல் கட்சியும் அதற்குமுன் கண்டுகொள்ளவே இல்லை.

ஒரு காலத்தில் இரவுநேரங்களில் ராப் பிச்சைக்காரர்கள் எனப் பலர் திரிந்ததைப் பழைய தலைமுறையினர் பார்த்திருக்கலாம். இன்றைக்கும் அப்படிப்பட்ட வர்க்கம் தமிழ்நாட்டில் இல்லை என்றே அடித்துச் சொல்லலாம். அதற்கு இந்தத் திராவிட இயக்க ஆட்சிதான் காரணம்.
சமீபத்தில் புதியதாக ஒரு புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. குஜராத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு என்கிறது அந்த அறிக்கை. சிறியதாக ஏற்பட்ட பொருளாதார தடுமாற்றத்தால் இவ்வளவு மக்கள் புதியதாக வறுமைக்கோட்டுக்குக் கீழே சென்றுள்ளனர்.
இதைப்போன்று இன்னொரு உதாரணம். கலிஃபோர்னியாவை எடுத்துக்கொள்வோம். இது ஒரு வளர்ந்த நாடு. இது அமெரிக்காவில் இருக்கக் கூடிய மிகப் பணக்கார நாடு. அங்கே இப்போதும் வீடு இல்லாதவர்கள் இருக்கிறார்கள். சாலையிலேயே தற்காலிக டென்ட் அடித்து படுத்துறங்கும் மக்கள் அதிகம் உள்ளனர்.
வறுமையில் வளர்ந்த நாடுகள்!
அந்நாட்டில் சிறிய அளவில் பொருளாதார தடுமாற்றம் ஏற்படும்போது பலர் வேலையை இழந்து விடுகிறார்கள். அதனால் வாடகை தரமுடியாமல், காருக்கு தவணை கட்ட முடியாமல் அவர்கள் அனைவரும் வீதிக்கு வந்துவிடுவார்கள். இதைத்தான் ராகெட் எஃபெக்ட் என்பார்கள்.
அதைப் போன்ற கொடுமைகள் நடக்காமல் தடுப்பதற்காகத்தான் தமிழ்நாடு அரசு பல அணைகளைப் போட்டுள்ளது. அதில் ஒன்றுதான் குடும்ப அட்டை மூலம் விநியோகிக்கப்படும் உணவுப்பொருட்கள்.

ஒருவர் ஒரு அட்டையின் மூலம் 35 கிலோ அரிசியை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும். அதன் மூலம் அவர் உணவுப் பஞ்சம் இல்லாமல் ஒரு குடும்பம் எந்நிலையிலும் காப்பாற்றப்படுகிறது. இந்த முறை கலிஃபோர்னியாவில் இல்லை. ஆகவே, அவர்கள் வீதிக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இப்போது புரிகிறதா? நம் மாநில அரசு எந்தளவுக்கு முன் எச்சரிக்கையோடு இருக்கிறது என்று.
இதை உணர்ந்துதான் மு.கருணாநிதி தனது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கினார். இது 1970களில் தொடங்கப்பட்ட ஒரு பொதுத்துறை நிறுவனம்.
குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் குடியிருப்புகளைக் கட்டிக்கொடுப்பதே இதன் முதன்மை நோக்கம் இருக்கிறது. இதுகூட இந்தியாவில் ஒரு முன்னோடி திட்டம்தான்.
உணவு மற்றும் இருப்பிடத் தேவை உறுதி செய்யப்பட்டபிறகு கல்வியைக் கையில் எடுத்தார்கள். இந்தியாவில் வேறு எங்கும் செய்யாத ஒரு திட்டம் என்றால் முதலமைச்சர் காலை உணவுத்திட்டம்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு!
1920 ஆம் ஆண்டு செப் 16 அன்று சர் பிட்டி தியாகராயர் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்து முதன்முறையாகச் சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டம் அறிமுகமானது.
அப்போது நீதிக்கட்சி ஆட்சியிலிருந்தது. இதுதான் திராவிட இயக்கத்தின் தாய்க் கட்சி. அதன்பின் காமராஜர் அதைச் சிறப்பாக்கினார். எம்.ஜி.ஆர். மேலும் அதைச் சிறப்பித்தார். அதன்பிறகு மு.கருணாநிதி உணவுடன் முட்டையும் கொடுத்து, அதை உண்மையான சத்துணவாக மாற்றினார்.

இன்று பல மாநிலங்களை இதைச் செய்கின்றன. அதற்குக் காரணம் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தியதல். ஆகவே செய்கிறார்கள். National food security act ஒரு பகுதியாக இது மாறியதால் பல மாநிலங்கள் அதைக் கடைப்பிடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், முதலில் யோசித்து இதைச் செயல்படுத்தியது தமிழ்நாடுதான். வழிகாட்டியது தமிழ்நாடுதான்.
முதலில் ஆரம்பக் கல்வியைக் காமராஜர் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தார். அன்றைக்குத் தமிழ்நாட்டில் உள்ள 10% மக்களுக்குக்கூட எழுத்தறிவு என்பது இல்லை.
காமராஜர் ஆட்சியில், அதாவது 1950 ஆண்டிலிருந்து 15,700 தொடக்கப்பள்ளிகள் இருந்தன. 1962இல் அது 29,000 ஆக உயர்ந்தது. அதைப்போலவே 1955இல் வெறும் 814 உயர்நிலைப் பள்ளிகள்தான் இருந்தன. அவை 1996 ஆக 1962இல் உயர்ந்தன.
கல்வியை ஊக்குவிக்கப் பிள்ளைகளுக்கு பென்சில் கொடுப்பது தொடங்கி, பின் சீருடை, செருப்பு, புத்தகப்பை, பேருந்து இலவச பாஸ், சைக்கிள் என வளர்ந்து இன்று மடிக்கணினி வரை வந்துசேர்ந்துள்ளது.

இப்போது அதன் தொடர்ச்சியாக உயர்கல்விக்குப் போகும் பெண் பிள்ளைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அளித்து வருகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இதனால் Gross Enrolment ratio அதாவது, உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் 52% ஆக உயர்ந்துள்ளது.
அதாவது கல்லூரிக்குப் போவதற்குத் தகுதி உள்ள 100 மாணவர்களில் 52 பேர் கல்லூரிக்குச் செல்கிறார்கள். மீதி 48 பேர்தான் போகாமல் தடைப்பட்டு இருக்கிறார்கள். பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடுதான் முதல் படியில் உள்ளது.
உயர்கல்வி வரை உறுதி செய்தது திமுக அரசுதான். இன்று அது 'திராவிட மாடல்' ஆக மாறி, சிவில் சர்வீஸ் எழுதும் மாணவர்களுக்கு மாதம் ஊக்கத்தொகையாக 7,500 தரும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது.
இடஒதுக்கீட்டில் முன்னோடி தமிழ்நாடு:
கல்வி என்பது இங்கே சமநிலையில் இல்லை என்பதை முதலில் அரசியல்ரீதியாக கையில் எடுத்த முதல் இயக்கம் திராவிட இயக்கம்.
இந்தியாவிலேயே இடஒதுக்கீடு என்பதை மிக அதிக அளவு பகிரப்பட்டது தமிழ்நாட்டில்தான். 69% அளவுக்கு இடஒதுக்கீட்டை கொண்டுவந்தார்கள். இந்தியாவில் பெண் உரிமை என்பதைப் பற்றி யாரும் வாய்திறக்காத காலத்தில் 1989 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி, குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை வழங்கும் சட்டத்தை இயற்றினார். இதிலும் தமிழ்நாடுதான் முன்னோடி.

இதன் இன்னொரு வடிவமாகவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள பிறமாநிலங்கள் தமிழ் நாட்டிலிருந்து கடன்பெற்றுக் கொண்டுள்ள சிறப்பான திட்டம் இது. ஸ்டாலினின் ஆட்சிக்காலம் முடியும்வரை கிட்டத்தட்ட இத்திட்டத்திற்காக மட்டும் 30 ஆயிரம் கோடியை அரசு செலவிட உள்ளது.
மூன்றாம் பாலினத்தவருக்கு அங்கீகாரம்:
முன்பே சொன்னதைப் போல் வறுமை ஏற்படாமல் இருப்பதற்காக அரசு செய்து தந்துள்ள தடுப்பணைகளில் இதுவும் ஒன்று. இதனால் என்ன மாற்றம் வரும் என்பதை 10 ஆண்டுகள் கழித்தே கணிக்க முடியும். அதற்காக நாம் பொறுத்திருக்க முடியாது. இன்றே அதைச் செய்தால்தான் நாளை ரிசல்ட் வரும்.
பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கிய திமுகதான், அதன் அடுத்தகட்டமாக எல்.ஜி.பி.டி.ஐ.க்யூ வகுப்பினர் மீது கவனத்தைச் செலுத்தியது. இதற்கு முன்னர் அக்கறை செலுத்திய கட்சி தமிழ்நாட்டில் வேறு இல்லை.
முதன்முதலாகத் திருநங்கைகளுக்கு என்று மு கருணாநிதி, தனது ஆட்சிக் காலத்தில் நலவாரியம் அமைத்தார். இன்று அதன் தொடர்ச்சியாகப் பால் புதுமையாக்கு அகராதியை அரசாணையாக வெளியிட்டு கவுரவம் சேர்த்திருக்கிறார் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
இப்படி உணவு, இருப்பிடம், கல்வி, சொத்துரிமை எனப் பலவற்றையும் உறுதிசெய்த பிறகு மருத்துவத்திற்குக் கவனம் அளித்தது திராவிட இயக்கம்.
இன்றைக்கு 'மக்களைத்தேடி மருத்துவம்' என்ற திட்டம் இந்தியாவில் பிற மாநிலங்களில் எங்கேயும் இல்லாத ஒரு முன்மாதிரியானது திட்டம். அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் செயல்படுத்தியுள்ளார்.

ஒருவருக்கு நோய் வந்ததற்குப் பிறகு அதற்கு சிகிச்சை அளிப்பதைவிட, அதை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பல மரணங்களைத் தடுத்துவிடலாம். ஆனால், மக்கள் பலரும் நோயைத் தொடக்கத்திலேயே கண்டறிவதில்லை.
அதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதற்கான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம். குடும்ப பொருளாதாரத்தால் இருக்கலாம். இப்படிப் பல தடைகள் உள்ளன. ஆகவேதான் ஸ்டாலின் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.
தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு:
40 வயதுக்கு மேற்பட்டவர்களை யாராக இருந்தாலும் இந்தக் குழு வீடு தேடிப் போய் அவர்களை மருத்துவப் பரிசோதனை செய்கிறது. இது ஆரம்பிக்கப்பட்ட பிறகு யார் யாருக்கு ரத்தக்கொதிப்பு இருக்கிறது? சர்க்கரை நோய் உள்ளது? என்று மிகத் தெளிவான டேட்டா அரசுக்குக் கிடைத்துள்ளது.
புதிய டேட்டாவை பழைய டேட்டாவுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மத்திய அரசும் இதைப் போன்று ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது.
ஆனால், அதற்கும் மக்களைத் தேடி மருத்துவத்திற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. மத்திய அரசுத் திட்டத்தின்படி ஒருவர் அரசு மருத்துவமனைக்கு ஏதேனும் பிரச்சினை என்று சென்றால், அவர்களுக்கு ரத்தக்கொதிப்பு, சர்க்கரை அளவை சோதித்து அந்த டேட்டாவை அப்டேட் செய்துகொள்வார்கள். அது அரசுக்குக் கிடைத்துவிடும்.
முதலில் அதற்கு ஒருவர் அரசு மருத்துவமனையின் உள்ளே செல்லவேண்டும். அப்போதுதான் அது சாத்தியம். தமிழ்நாடு அரசின் திட்டம் அப்படியல்ல; வீடு தேடிச் சென்று பரிசோதனையைச் செய்கிறார்கள்.
இதனால் மாநிலம் முழுவதும் ஒரு தெளிவான டேட்டா அரசுக்குக் கிடைத்துள்ளது. அதைவைத்து மாநில அரசால் மிகத்துல்லியமாக எந்தத் திட்டத்தை வகுக்க முடியும்.
தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் மாநில அரசின் மருத்துவமனைகளின் நிலையைக் குறை சொல்கிறார்கள். ஆனால், வேறு மாநிலத்திலிருந்து இங்கே ஆய்வுக்காக வரும் அதிகாரிகள் தமிழ்நாட்டிலுள்ள பொது மருத்துவமனைக் கட்டமைப்பைப் பார்த்து வியந்து போகிறார்கள்.
வியந்துபோன குஜராத் அதிகாரிகள்:
சில நாள்கள் முன்னதாக குஜராத்திலிருந்து கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை ஆய்வு செய்ய அதிகாரிகள் வந்திருந்தார்கள். அவர்களை அதை முழுமையாக ஆய்வுசெய்துவிட்டு, 'ஒரே இடத்தில் இத்தனைப் பெரிய மருத்துவ உள்கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள்? எப்படி இது சாத்தியம்?' என்று வியந்துபோய் கேட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு Tamil Nadu Medical Services Corporation Limited என்ற பொது நிறுவனத்தை மிகச் சிறப்பாக நிர்வகித்து வருகிறது. ஒருகாலத்தில் ஒவ்வொரு அரசு மருத்துவமனையும் தங்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை தனித்தனியாகக் கொள்முதல் செய்யும்.
அப்படித் தனித்தனியாக மருந்துகளைக் கொள்முதல் செய்யும் போது, ஒவ்வொரு மருத்துவமனையும் வேறுவேறு விலைகளில் மருந்தைக் கொள்முதல் செய்தனர். பொதுவான ஒரு விலை நிர்ணயம் கடைப்பிடிக்கப்படாமல் இருந்தது. இதனால், அரசுக்கு அதிக நிதி செலவானது.
உடனே இதைத் தடுக்கத்தான் Tamil Nadu Medical Services Corporation Limited என்ற நிறுவனத்தை அரசு உருவாக்கியது.
அதன்பின்னர் சாதாரண ஆரம்பச் சுகாதார நிலையம் தொடங்கி மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை வரை உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் தேவையான மருந்துகளை மொத்தமாகக் கொள்முதல் இந்நிறுவனமே செய்யத் தொடங்கியது.
இதனால், ஒரே கம்பெனி அதிக அளவில் மாத்திரைகளை ஒரே நேரத்தில் கொள்முதல் செய்வதால், 1 ரூபாய் மாத்திரை 50 காசுக்குக் கொள்முதல் செய்யப்பட்டது. அதிக கொள்முதல் என்பதால் பல நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு விலையைக் குறைத்து வழங்க முன்வந்தார்கள்.
மேலும் அரசு Generic medicine மட்டுமே கொள்முதல் செய்தது. Branded medicine வாங்குவதை நிறுத்தியது. பொதுவாக Generic medicine மருந்துகளை வாங்கினால் விலை குறைவாகக் கிடைக்கும். அரசு லட்சக் கணக்கில் மொத்த கொள்முதல் செய்யும் போது விலை இன்னும் குறைவாகக் கிடைத்தது.
இதனால் அரசுக்கு அதிக லாபம் வந்தது. இந்தத் திட்டத்தைப் பார்த்துவிட்டு, உலக வங்கியானது மூன்றாம் உலக நாடுகளில் இதை அப்படியே நடைமுறை செய்தது.
ஆனால், தமிழ்நாட்டில் வெற்றிகரமாக இத்திட்டம் இயங்கி வருவதைப்போல வேறு எங்கும் இதுவரை வெற்றியடையவில்லை. அதற்குத் தமிழக அரசின் நிர்வாகமே காரணம்.
இந்த நடைமுறை தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் இப்படி ஒருநடைமுறை பின்பற்றப்படவில்லை. இது மிகச்சிறப்பான இயங்கி வரும் நிறுவனம் இது. ஆனால், பலருக்கும் இதன் மதிப்பு தெரிவதில்லை.
உயிர்காக்கும் உயர் சிகிச்சைகள் இலவசம்:
அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டுவந்த சிகிச்சைகளைப் பெரிய அளவுக்கு விரிவாக்கியது திராவிட இயக்க ஆட்சிக் காலகட்டத்தில்தான்.
உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.07.2009 அன்று தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் பெயரிலேயே அதை யார் கொண்டு வந்தார்கள் என்பது விளங்கிவிடும். இது ஒரு தமிழ்நாடு கண்ட முன்னோடித் திட்டம்.
இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ஜனவரி 2022 ஆம் ஆண்டு வரை சுமார் 1.37 கோடி குடும்பங்கள் பலன்பெற்றுள்ளனர். உயர் சிகிச்சை என்பது பலருக்கும் எட்டாக்கனியாக இருந்தபோது அதை, கடைக்கோடி மனிதன் வரைக்கும் கொண்டுபோய் சேர்த்தார் மு.கருணாநிதி.
இந்தியாவே வியந்த இன்னொரு முன்னோடித் திட்டம் உறுப்புமாற்று அறுவைசிகிச்சை திட்டம். இது 2008 செப்டம்பர் 5ஆம் தேதி அவரது ஆட்சியில்தான் 'தமிழக அரசு மூளைச் சாவு உறுப்பு மாற்றுச் சிகிச்சை திட்டம்' தொடங்கப்பட்டது. இது 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு உறுப்புமாற்று ஆணையமாக உருவாக்கப்பட்டது.
உணவு, உடை, கல்வி, மருத்துவம் எனப் பல தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு மக்களின் பொது அறிவு சார்ந்த அறிவை விரிவு செய்ய முதல் முயற்சி செய்தார் மு.கருணாநிதி. அதன் ஒரு பகுதியாக வண்ணத் தொகைக் காட்சிகளை வழங்கினார்.
மக்களுக்குத் தரும் பொருட்கள் இலவசங்களா?
அதைப் பணக்காரர்கள் free pics என்று கேலிப் பேசினர். இதைக் கொச்சைப் படுத்தும் விதமாக இன்றுகூட மோடி தன் பேச்சில் Revdi culture என்று கிண்டல் செய்திருக்கிறார்.
இவை எதுவும் free pics அல்ல. அதற்குப் பல உதாரணங்களைப் பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் அளித்திருக்கிறார். அதற்கு மாற்றாக அவர் Pork barrel politics என்று தனிக் கட்டுரையே எழுதி இருக்கிறார்.
Pork barrel politics என்பது தேர்தல் சமயத்தில் ஒரு குறிப்பிட்ட தொகுதியை டார்கெட் வைத்து வாக்காளர்களுக்கு அதிகமான இலவசங்களை அள்ளி வீசுவது. அதுவே அரசு 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு இலவசமாக அரிசி வழங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை Pork barrel politics என்று சொல்ல முடியாது. அது மக்கள் நலம் சார்ந்து வழங்கப்படும் உரிமைகள்.
ஏனென்றால், அது குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களுக்கு மட்டும் போய்ச் சேரவில்லை. மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் அனைவருக்கும் போய்ச் சேருகிறது. அதை மக்கள் நலத் திட்டம் என்றுதான் பார்க்க வேண்டும்.
தொழிற்சாலைகள் நிறைந்த தமிழ்நாடு:
இப்படி எல்லாம் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியதால்தான் தமிழ்நாடு இன்று தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாக முன்னேறி இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கைத் தமிழ்நாடு தனது பங்களிப்பை வழங்கிவருகிறது.
அதைப்போன்று இ பைக் உற்பத்தி, எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, தோல் பொருட்கள் உற்பத்தி, ஆட்டோமொபைல் உற்பத்தி என பலதுறைகளில் உலக அளவில் தமிழ்நாடு முக்கியமான ஹப் ஆக உள்ளது. இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது.
-
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications