உங்கள் குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுப்பது இப்போது ரொம்ப ஈஸி.. எப்படி?
சென்னை: உங்களது ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எப்படி ஆதார் கார்டு எடுப்பது என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஆதார் அட்டை எண் என்பது எல்லாருக்குமே மிக முக்கியமான ஆவணம். பிறப்பு தொடங்கி வாழ்வின் இறுதிவரை பயணிக்க போகும் விஷயம் என்றால் இது ஆதார் தான். அரசின் அத்தனை சேவைகளுக்கும், அத்தனை திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் சேர்ப்பது முதல், வாகனம் வாங்குவது, லைசென்ஸ் எடுப்பது, பாஸ்போர்ட் எடுக்க, இடம் வாங்க,வீடு வாங்க, நிலம் வாங்க, மின் இணைப்பு வாங்க, மகளிர் உரிமை தொகை வாங்க, விவசாயிகள் மானியம் வாங்க, கல்வி உதவி தொகை பெற, வருமான வரி தாக்கல் செய்ய , பான் கார்டு வாங்க, வாக்களாளர் அடையா அட்டை வாங்க என எது வேண்டும் என்றாலும்இன்றைக்கு ஆதார் அவசியம். உங்கள் ஆதார் எண் ஒன்று போதும் உங்களது மொத்த ஜாதகத்தையும் அறிந்துவிடலாம்.
அப்படிப்பட்ட ஆதார் இருந்தால் பள்ளிகளில் சேர்க்க எளிதாக இருக்கும். அதே போல் குடும்ப அட்டையில் உங்கள் குழந்தையின் பெயரையும் சேர்க்க முடியும். நாம் இந்த செய்தியில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் எடுப்பது எப்படி? எங்கே எடுக்க வேண்டும்? என்பது குறித்து பார்ப்போம்.
உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் நகல்களை எடுங்கள். அப்படியே அருகிலுள்ள ஆதார் பதிவு மையம் அல்லது தாலுகா அலுவலகத்திற்குச் சென்று அங்கு கொடுக்கப்படும் ஆதார் பதிவு படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். உங்கள் குழந்தை 5 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றால், நீங்கள் தாய் அல்லது தந்தையின் ஆதார் விபரங்களை கண்டிப்பாக நிரப்ப வேண்டும். பின்னர், ஆதார் பதிவு மையத்தில் உங்களது குழந்தையின் புகைப்படத்தை எடுப்பார்கள்.
இதையடுத்து குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் நகல் அல்லது மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள டிஸ்சார்ஜ் சான்றிதழை ஸ்கேன் செய்வார்கள். ஆனால் பெரியவர்களுக்கு எடுப்பது போன்று குழந்தைகளுக்கு அவர்களின் கைரேகைகள் மற்றும் விழித்திரை ஸ்கேன் எடுக்க மாட்டார்கள். அதற்கு மாற்றாக பெற்றோர்களில் ஒருவரின், வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட் போன்ற சரியான அடையாள ஆவணத்தைக் காட்டி கைரேகை எடுத்துக்கொள்வார்கள். பின்னர் ஆதார் நிர்வாகி பதிவு எண் அடங்கிய ஒப்புகை சீட்டை உங்களிடம் வழங்குவார்கள்.
அவ்வளவு பிராசஸ்.. எளிதாக புதிய ஆதார் விண்ணப்பிக்கும் பணி நிறைவு பெறும். இதனையடுத்து நீங்கள் அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்தில் இருந்து உங்களது குழந்தையின் ஆதார் அட்டையின் டிஜிட்டல் நகலை சில நாட்கள் கழித்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். புதிய ஆதார் அட்டை உங்கள் வீட்டிற்கே வந்துவிடும்.
குழந்தைகளின் ஆதார் எண்ணை, பெற்றோர்கள் தங்கள் மொபைல் எண் இணைத்து mAadhaar செயலியைப் பயன்படுத்தலாம். உங்கள் குழந்தைகளின் ஆதார் எண்ணை எடுத்த பின்னர், அதனை எடுத்து இசேவை மையத்திற்கு சென்று எளிதாக நீங்கள் உங்கள் குழந்தையின் பெயரை குடும்ப அட்டையிலும் சேர்க்கலாம்.குடும்ப அட்டையில் உங்கள் குழந்தையின் பெயரை சேர்க்க அதிகபட்சம் 20 நாட்கள் ஆகும். நீங்களே கூட ஆன்லைன் மூலமும் குடும்ப அட்டையில் குழந்தையின் பெயரை சேர்க்கலாம்.












Click it and Unblock the Notifications