இங்கேதான் படித்தேன்.. உங்கள் சீனியராக கலந்து கொண்டுள்ளேன்.. சென்னை பல்கலை. விழாவில் ஸ்டாலின் பேச்சு
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் தான் நானும் படித்தேன்... அந்த வகையில் உங்கள் சீனியராக நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசினார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 165 வது பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:- பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் சொல்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.. .எட்டும் அறிவினில் ஆணுக்கு பெண் இழப்பு இல்லை.. காணென்று கும்மியடி என்று பாடினார் பாரதியார். அதற்கு எடுத்துக்காட்டாக இந்திய நாட்டின் குடியரசுத்தலைவர் நாற்காலியில் அமர்ந்து கோலோச்சி வரக்கூடிய குடியரசுத்தலைவர் திரளபதி முர்மு அவர்களுக்கு எனது வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிறந்து விளங்கும் பல்கலைக்கழகம் என்ற அடைமொழியை சென்னை பல்கலைக்கழகத்திற்கு யுஜிசி வழங்கியுள்ளது. நோபல் பரிசு பெற்ற சர் சிவி ராமன் படித்த பல்கலைக்கழகம் இது... மிகப்பெரும் அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள்.. ஆராய்ச்சியாளர்கள்.. முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி உள்பட பல சிறந்த ஆளுமைகளை வழங்கிய பெருமை இந்த பல்கலைக்கழகத்திற்கு உண்டு.
தமிழ்நாட்டில் தலைமகன் அண்ணா இந்த பல்கலைக்கழகத்தில் தான் படித்தார். இன்று முதல்வராக உங்கள் முன் உரையாற்றும் நானும் இதே பல்கலைக்கழகத்தில் படித்தவன் தான்... அந்த வகையில் உங்கள் சீனியராக இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டுள்ளேன். நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கு நிலையான பங்களிப்பை சென்னை பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. தமிழ்நாடு உயர்கல்வியில் இந்தியாவிலே சிறந்து விளங்கும் மாநிலமாக இருக்கிறது.
இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டில் மட்டுமே 18 நிறுவனங்கள் உள்ளன. தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 பல்கலைக்கழங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. தலைசிறந்த 100 கல்லூரிகளில் 32 தமிழ்நாட்டில் தான் உள்ளன. கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பாக நீதிக்கட்சி ஆட்சியில் கல்விக்காக போட்ட விதைதான் இதற்கு காரணம்.
பள்ளிக்கல்வியை வளர்த்தார் காமராஜர்... கல்லூரிக் கல்வியை விரிவு படுத்தினார் கருணாநிதி.. இன்று திராவிட மாடல் ஆட்சியில் உயர்கல்வியை ஊக்குவித்து வருகிறோம். ஆராய்ச்சி கல்வியாக அதனை உயர்த்தி வருகிறோம். அனைத்து மாணவர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்கி தனி திறமையானவர்களாக வளர்த்து வருகிறோம். எனது கனவு திட்டமான நான் முதல்வன் திட்டம் சிறந்து வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications