மத்திய அமைச்சர் பதவி எனக்கா? சூசகமாக பதிலளித்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்
சென்னை: மத்திய அமைச்சர் கனவு எனக்கு கிடையாது என்று துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.
தேனி மக்களவைத் தொகுதியில், அதிமுக வேட்பாளராக களமிறங்கிய ரவீந்திரநாத் குமார் 4,99,354 வாக்குகள் பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை, 76, 319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் வென்ற ஒரே ஒரு அதிமுக வேட்பாளர் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே. வேலூர் மக்களவைத் தொகுதியை தவிர, 38 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.
இந்தநிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்திரநாத் குமார், மத்திய அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கனவு எனக்கு இல்லை என்றார். அதே நேரம், அதிமுகவை வழிநடத்தும் துணை முதலமைச்சர், முதலமைச்சர் என்ன சொல்கிறார்களோ அவ்வாறு செயல்படுவேன் என்றும் கூறினார்.
மேலும், தேனி தொகுதியில் குடிநீர் பிரச்னையை முழுவதுமாக தீர்க்க பாடுபடுவேன் என்றும் கூறினார். ஏற்கனவே, ஓபிஎஸ்க்கு சொந்தமான கிணற்றால் லட்சுமிபுரம் மக்களுக்கு குடிநீர் பிரச்சனை ஏற்பட்டு, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது நினைவிற்குரியது.
அதே போல், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி தருவது பற்றி பிரதமர் நரேந்திரமோடி முடிவு எடுப்பார் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். மோடி தமிழகத்திற்கு அங்கீகாரம் கொடுப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, மத்தியமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து, அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications