“நான் தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் எங்களிடம் தான் உள்ளது” - அடித்துச் சொன்ன அன்புமணி!
சென்னை: "பாமகவுக்கு தலைவர் நான் தான் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை பா.ம.க தலைவராக நானே தொடர்வேன். பாமகவிற்கு தலைவர் நான் என்பதால் மாம்பழம் சின்னம் எங்களிடம் தான் உள்ளது" என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையில், அன்புமணி பா.ம.க தலைவர் அல்ல என ராமதாஸ் அறிவித்தார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தின்படி நான்தான் பா.ம.க தலைவர் என தெரிவித்தார் அன்புமணி. இதனால் இருதரப்பிலும் பெரும் குழப்பம் நீடித்தது.

இதற்கிடையில், தேர்தல் ஆணையம் அன்புமணியை தலைவராக அங்கீகரிப்பதாக நோட்டீஸ் அனுப்பியது. இதனால் கடும் அதிருப்தியடைந்த ராமதாஸ், நான் 1980-ல் இயக்கம் தொடங்கி இன்று வரை 46 ஆண்டுகள் கட்சி நடத்தி வருகிறேன். அன்புமணி சதித் திட்டம் தீட்டி 2023 பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக போலியான ஆவணங்களை தலைமை தேர்தல் ஆணையத்தில் கொடுத்து தேர்தல் ஆணையத்தை கையில் போட்டுக்கொண்டு 2026 வரையில் பதவியில் நீடிப்பதாக தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்துள்ளது." என கொதித்தெழுந்தார்.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. அப்போது ராமதாஸ் தரப்பு, "ராமதாஸ் தான் கட்சியின் நிறுவனர், ஒரு கோடி உறுப்பினர்கள் அவருக்கு கீழ் உள்ளனர், அன்புமணி தரப்பு தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் போலியானவை. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தவறு செய்திருக்கிறது" எனக் குற்றம்சாட்டியது.
அன்புமணி தரப்பில், கட்சியின் தலைவராக பாமக அன்புமணியை அங்கீகரித்துள்ளது" என வாதத்தை முன்வைத்தது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "எங்களுக்கு கிடைத்த ஆவணங்களின்படி அன்புமணி தலைவர் என்று கூறினோம். அது உறுதி இல்லை என்றால், அன்புமணி தலைவர் பதவியில் இல்லை என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், எதிர் தரப்பினர் அணுகலாம்.
கட்சியின் தலைவர் விவகாரத்தில் நாங்கள் எந்த தனிப்பட்ட முடிவையும் எடுப்பதில்லை. அவர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம். இரு தரப்புக்கும் பிரச்சனை நீடித்தால் கட்சியின் மாம்பழம் சின்னம் யாருக்குமின்றி முடக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதி, "பாமக கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி. அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. ஒரு தரப்பு வாதத்தையும் அவர்களின் கடிதங்களை மட்டும் வைத்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது. அது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வராது. தனிப்பட்ட உரிமை கோருவோர் சிவில் நீதிமன்றத்தை நாடலாம்" என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவித்துள்ள அன்புமணி, "2026 ஆகஸ்ட் மாதம் வரை பொதுக்குழுவால் எனக்கு பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வாதங்களை கேட்ட நீதிமன்றம் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது எனச் சொல்லிவிட்டது. எனவே கட்சியின் தலைவர் நான் தான். மாம்பழம் சின்னமும் எனக்கு தான்" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications