இந்தா கிளம்பிட்டாங்க.. விமர்சகர் கவுசிக் திடீர் மரணம் ஏன்? எனக்கு தெரியும்- பீதி கிளப்பும் தணிகாசலம்
சென்னை: பிரபல சினிமா செய்தியாளர் கௌசிக் இளம் வயதில் மரணமடைந்ததை கொரோனா தடுப்பூசியுடன் ஒப்பிட்டு இயற்கை வைத்தியர் எனக் கூறிக்கொள்ளும் தணிகாசலம் பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல சினிமா விமர்சகரும், சினிமா செய்தியாளருமான கௌசிக் தனியார் ஊடகங்களில் பணிபுரிந்து சினிமா குறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தார். அத்துடன் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சினிமா குறித்த தகவல்களை பதிவிட்டு வந்தார்.
இதன் மூலமாக சமூக வலைதளங்களில், திரையுலகினர் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான முகமாக அறியப்பட்டு வந்தார் கௌசிக் . இவர் வெளியிடும் தகவல்களை அறிந்துகொள்ள பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கவுசிக்கை பின் தொடர்ந்து வந்தனர்.
உயிரிழப்பு
இந்த நிலையில் நேற்று மதியம் உறங்கிக் கொண்டிருந்த கௌசிக் உயிரிழந்ததை கண்டு அவருடன் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். பின்னர் அவர் உறக்கத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டே காலமானதாக தகவல் வெளியானது. கௌசிக்கின் மரண செய்தி அறிந்து ஊடகத்துறையினர், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பிரபலங்கள் இரங்கல்
அவரது மரணத்துக்கு நடிகர்கள் துல்கர் சல்மான், ராகவா லாரன்ஸ், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகைகள் கீர்த்தி சுரேஷ், அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்ட பலரும் இரங்கல் பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்து இருக்கின்றனர். 35 வயதான கௌசிக் கின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்தவர்களில் சிலர் அவரது மரணம் குறித்த சந்தேகங்களையும் எழுப்பி வருகின்றனர்.
Recommended Video
தணிகாசலம் கருத்து
இந்த நிலையில், இயற்கை மருத்துவர் என்று கூறிக்கொள்ளும் தணிகாசலம் கௌசிக்கின் மரணம் தொடர்பாக முகநூலில் சந்தேகத்தை கிளப்பி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இளம்வயது பத்திரிகையாளர் மரணம் ஆழ்ந்த இரங்கல். இதற்கான காரணம் தெரியும். காரணம் சொன்னா பில்லுகட்டு கோபிச்சிக்கும். கொரோனோ ஊசி பரிசோதனைக்கும் ஆள்சேர்த்திருக்கிறார். இவரும் பரிசோதனையில் பங்கேற்றிருக்கிறார்.
கொரோனா தடுப்பூசி
டபுள் டோஸ் போட்டவங்க கீழ்கண்ட பரிசோதனை செய்து பாருங்க CBC LFT D.Dimer CRP LDH ESR Ferritin பிரச்னை இருந்தால் தமிழர் மரபு சிகிச்சை எடுங்க. அசதி லேசான ஒருபக்க வலி வயிற்றுவலி நெஞ்சு படபடப்பு தூக்கமின்மை இருந்தால் கண்டிப்பாக எடுங்க." என்று குறிப்பிட்டு உள்ளார். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்த தணிகாசலம், கொரோனா தடுப்பூசிக்கு எதிராகவும் தொடக்கத்தில் இருந்தே பேசி வருவது குறிப்பிடத்தக்கது.