அண்ணாமலை "வி தி லீடர்ஸ்"னு இப்ப தானே ஆரம்பிச்சாரு! அதுக்குள்ள இப்படியா?
நெல்லை: "வி தி லீடர்ஸ்" என்ற அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் எதிர்காலத்தில் தேர்தல்களில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளோம் என அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் கூறியிருப்பதாவது: போதை கலாச்சாரத்திற்கு எதிராக ஜூலை 19ஆம் தேதி திருச்செந்தூரில் பொதுக் கூட்டம் நடத்த போகிறோம். அதில் அண்ணாமலை கலந்து கொள்கிறார். எங்கள் அமைப்பு எந்த அரசியல் கட்சிக்கும் பினாமி அமைப்பு அல்ல.

தமிழர்களை முன்னிறுத்தி தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழக அரசு செயல்படுத்தி வரும் சில திட்டங்களை வரவேற்கிறோம்.
அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களை அமைச்சர்களாக்கி இருப்பது பாராட்டுக்குரியது. அதே வேளையில் தவெகவுக்கும் திராவிட கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பது போல் எங்களுக்கு தெரியவில்லை.
தற்போது அமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். வி தி லீடர்ஸ் அமைப்பை விரைவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
எதிர்காலத்தில் உள்ளாட்சித் தேர்தல், லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். எதிர்கால அரசியல் சூழலுக்கேற்ப கூட்டணி அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக எங்கள் அமைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார். பாஜகவில் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை தனக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தனது பேச்சுக்கு எந்தவித மரியாதையும் தருவதில்லை என கூறி பாஜகவில் இருந்து விலகினார்.
அவர் தற்போது வி தி லீடர்ஸ் என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இதில் போதிய உறுப்பினர்கள் சேர்ந்துவிட்டதும் அரசியல் கட்சியாக மாறும் என அறிவித்திருந்தார்.
அது போல் இந்த அமைப்பு தொடங்கியதுமே பாஜகவிலிருந்து பலர் விலகி , அண்ணாமலையின் அமைப்பில் சேர்ந்தனர். அது போல் அடுத்தடுத்த நாட்களில் பாஜகவினர் மட்டுமல்லாமல் இளைஞர்கள் பலர் அந்த கட்சியில் இணைந்தனர்.
இந்த அமைப்பில் தற்போது 18 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இது 50 லட்சமாக உயரும் போது அண்ணாமலை அரசியல் கட்சியாக மாற்றுவார் என தெரிகிறது. மேலும் உள்ளாட்சி தேர்தலில் அண்ணாமலையின் அரசியல் கட்சி போட்டியிடுமா என்பதை பார்க்க வேண்டும். தனது கட்சியில் நிரந்தர எம்எல்ஏ, எம்பி என யாரும் இருக்க மாட்டார்கள். புதியவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கி நிறைய இளைஞர்கள் புதிது புதிதாக அரசியலுக்கு வர வேண்டும் என்பதுதான் தனது எண்ணம் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications