முதல்வராக விஜய்யின் முதல் பிறந்தநாள் இன்று! சட்டசபையில் எந்த அறிவிப்பும் இல்லை! நாளை பார்க்கலாம்!
சென்னை: முதல்வர் விஜய்யின் 52 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் சட்டசபையில் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் அவர் நாளை உரையாற்றுவார் என சபாநாயகர் கூறியுள்ளதால் நாளை ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகிறதா என்பதை பார்க்கலாம்.
அரசியல் வருகை மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய், மே 10, 2026 அன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இதுவாகும். இதுவரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அல்லது 'தளபதி' என்று அழைக்கப்பட்ட விஜய், இப்போது மாநிலத்தின் முதலமைச்சராகத் தனது முதல் பிறந்தநாளைக் கொண்டாடுவதால், அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் இது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
முதலமைச்சராக அவரது முதல் பிறந்தநாள் என்பதால், இன்று மக்கள் நலத்திட்டங்கள் அல்லது புதிய அரசு கொள்கைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
குறிப்பாக மகளிருக்கு மனம் குளிரும் சர்பிரைஸ் காத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மாண்புமிகு மகளிர் திட்டம்: பெண்களுக்கு மாதம் ₹2,500 உதவித்தொகை.
அண்ணன் சீர்: ஏழைப் பெண்களுக்குத் திருமணத்தின் போது பட்டுப்புடவையுடன் ஒரு சவரன் தங்கம்.
அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்: தமிழகத்தில் பெண்கள் அனைவருக்கும் கட்டணமில்லாப் பேருந்து சேவை.
குழந்தைகளுக்கான அன்புப் பரிசு: அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரை பவுன் தங்க மோதிரம்.
இந்த நிலையில் இன்று தமிழக சட்டசபை கூடிய போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. இதில் இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசினார். அப்போது சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சினை குறித்து அவர் பேசியிருந்தார். இந்த நிலையில் எம்எல்ஏக்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் விஜய் நாளை பதிலளிக்கிறார். அப்போது ஏதாவது அறிவிப்பு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பிரம்மாண்ட கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆடம்பரக் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, மக்களுக்கு உதவும் வகையில் அன்னதானம் வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற மக்கள் சேவைப் பணிகளில் ஈடுபட தவெக மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரத்ததானம் முகாம்களையும் தவெகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
தற்போது சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் முதலமைச்சருக்கு முறைப்படி தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் தனது தொகுதியைச் சேர்ந்த மக்களுடன் இணைந்து வியாசர்பாடியில் கேக் வெட்டி இந்த நாளைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளார், அங்கு அவருக்கான புதிய எம்.எல்.ஏ (சட்டமன்ற உறுப்பினர்) அலுவலகமும் அமைக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications