“1000 கோடி சொத்து இல்லை.. கடனோட இறந்த பாரதிராஜா?” மனோஜ் மனைவியிடம் இருந்த ஆவணங்கள்? இயக்குநர் விளக்கம்
சென்னை: இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு பிறகு அவருடைய குடும்பத்தை சுற்றிய சர்ச்சைகள் அடங்கவே இல்லை. குறிப்பாக, "பாரதிராஜாவிடம் ஆயிரம் கோடி சொத்து இருந்தது", "அதை குடும்பத்தினர் பங்கிட்டுக் கொண்டார்கள்", "மகளிடம் தான் முக்கிய சொத்துக்கள் இருக்கிறது" என்ற பேச்சுகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், இயக்குநர் மனோஜ் குமார் வெளியிட்டுள்ள தகவல்கள் இப்போது புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
இயக்குனர் மனோஜ் குமார் விளக்கம்
அவர் சொல்வதன்படி, பாரதிராஜா பற்றி வெளியில் பேசப்பட்ட மாதிரி ஆயிரம் கோடி சொத்து வைத்திருந்தவர் அல்ல. அதே நேரத்தில் "அவரிடம் ஒன்றுமே இல்லை" என்பதும் உண்மை இல்லை. சொத்துகள் இருந்தன. ஆனால் அந்தச் சொத்துகளுக்கு நடுவே கடன்களும் இருந்தன. அதிலும் குறிப்பாக, சில படங்களில் ஏற்பட்ட நஷ்டம், மகன் மனோஜை சினிமாவில் நிலைநிறுத்த எடுத்த முயற்சிகள், அதைத் தொடர்ந்து வாங்கப்பட்ட கடன்கள் - இதுவே கடைசிக் காலத்தில் பாரதிராஜாவை மனஅழுத்தத்தில் வைத்ததாக அவர் கூறியிருக்கிறார்.
மனோஜுக்காக எடுத்த முயற்சி
மனோஜை நடிகராகவும், பிறகு இயக்குநராகவும் கொண்டு வர பாரதிராஜா மிகப் பெரிய அளவில் முயற்சி செய்ததாக மனோஜ் குமார் கூறியிருக்கிறார். தாஜ்மகால், அல்லி அர்ஜுனா போன்ற படங்களிலேயே பாரதிராஜா பெரும் இழப்பை சந்தித்ததாகவும், மொத்தமாக சுமார் 15 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும் அவர் சொல்கிறார்.
அதோடு மட்டும் இல்லாமல், மனோஜ் இயக்குநராக வர வேண்டும் என்ற ஆசையிலும் மீண்டும் முதலீடு செய்திருக்கிறார் பாரதிராஜா. ஒரு கட்டத்தில், மனோஜ் இயக்கவிருந்த படத்துக்காக கூட ஒரு கோடிக்கும் மேலாக பணம் போடப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார்.
ஆனால் அந்த முயற்சியும் எதிர்பார்த்தபடி போகவில்லை. "மகனை நடிகனாகவும், இயக்குநராகவும் நிறுத்த வேண்டும் என்று அப்பா எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை; அதுவே பாரதிராஜாவுக்கு பெரிய மனவேதனையாக இருந்தது" என்பதே மனோஜ் குமார் சொன்ன முக்கிய விஷயம்.

கடனை அடைக்க விற்கப்பட்ட நிலங்கள்
படங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க பாரதிராஜா பல இடங்களில் கடன் வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதில் ஐடிபிஐ வங்கி, எல்ஐசி போன்ற இடங்களில் வாங்கிய கடன்களும் இருந்ததாக கூறப்படுகிறது. வெளியிலும் சிலரிடம் பணம் வாங்கியிருந்தாராம்.
இந்தக் கடன்களை அடைக்கவே, தேனியில் பள்ளிக்கூடம் கட்ட நினைத்து வைத்திருந்த ஒரு பெரிய இடத்தை விற்று ஒரு பகுதி கடனை அடைத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். அதற்குப் பிறகு, நீலாங்கரையில் வீட்டின் பின்னால் இருந்த 9 கிரௌண்ட் காலி இடத்தையும் விற்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாம். அந்த இடத்துக்கு அட்வான்ஸாக சுமார் நாலேகால் கோடி ரூபாய் வாங்கியதாகவும், மீதமிருந்த தொகையை வாங்கி கடனை முழுமையாக அடைக்க திட்டமிட்டிருந்ததாகவும் மனோஜ் குமார் விளக்கியிருக்கிறார்.
ஆனால் அந்த வேலை முழுமையாக முடியும்முன் மனோஜின் மறைவு நடந்துவிட்டதாம். அதன்பிறகு அந்தச் சொத்து விற்பனை, ஆவணங்கள், கடன் அடைப்பு எல்லாமே பாதியில் நின்றுவிட்டதாக அவர் சொல்கிறார்.
மனோஜ் மனைவி கையில் ஆவணங்கள்
இந்த விவகாரத்தில் அதிகமாக பேசப்படுவது இதுதான். பாரதிராஜாவின் சொத்து, கடன், ஒப்பந்தம் தொடர்பான பல முக்கிய ஆவணங்களையும் கடைசி காலத்தில் மனோஜ்தான் பார்த்துக்கொண்டிருந்தாராம். வரவு-செலவு விபரங்கள், விற்பனை ஒப்பந்தங்கள், கடன் தொடர்பான டாக்குமெண்ட்கள் எல்லாம் மனோஜ் வசமே இருந்ததாக மனோஜ் குமார் கூறியிருக்கிறார்.
மனோஜ் மறைந்த பிறகு, அந்த ஆவணங்கள் அவரது மனைவி நந்தனா வசம் இருந்ததாகவும், குறிப்பாக நீலாங்கரை இடம் தொடர்பான முக்கிய டாக்குமெண்ட்கள் குடும்பத்துக்கு உடனே திரும்ப கிடைக்காததே பிரச்சனையை நீட்டித்ததாகவும் அவர் பேசியிருக்கிறார். அந்த ஆவணங்கள் கிடைத்திருந்தால், மீதமிருந்த 6 கோடி ரூபாய் தொகையை வாங்கி வங்கி கடன்களை அடைத்திருக்கலாம் என்றும் அவர் சொல்கிறார்.
சொத்து பங்கீடு
"பாரதிராஜா சொத்தை யாருக்கு எழுதினார்?" என்ற கேள்விக்கும் மனோஜ் குமார் பதில் சொல்கிறார். அவர் கூறுவதன்படி, பாரதிராஜா உயிரோடு இருந்தபோதே மகன் மனோஜுக்கும், மகள் ஜனனிக்கும் தனித்தனியாக சொத்துகள் எழுதி வைத்திருந்தாராம்.

மனோஜ் பெயரில்
டி.நகரில் ஒரு வீடு, விருகம்பாக்கம் / தேனாம்பேட்டை பகுதியில் ஒரு கட்டிடம், ஜெமினி பகுதியில் ஒரு அபார்ட்மெண்ட் இவை இருந்ததாகவும், அவற்றிலிருந்து மாதந்தோறும் வாடகை லட்சக்கணக்கில் வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஜனனி பெயரில்
நீலாங்கரையில் ஒரு வீடு, தேனியில் ஒரு வீடு, ஆரிங்டன் ரோட்டில் ஒரு அபார்ட்மெண்ட் இப்படியாக முன்பே சொத்துகள் ஒதுக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலம், "பாரதிராஜா இறந்த பிறகுதான் சொத்து பங்கு பற்றி குடும்பம் சண்டை போட்டது" என்ற பேச்சுக்கும் அவர் மறைமுகமாக பதில் சொல்கிறார். அதாவது, பிள்ளைகளுக்கான அடிப்படை சொத்து ஒதுக்கீட்டை பாரதிராஜா முன்பே செய்துவிட்டார் என்பதுதான் அவர் சொல்வது.














Click it and Unblock the Notifications