நீட் மறு தேர்விலும் மோசடியா? பீகாரில் சிக்கிய ஆள்மாறாட்ட கும்பல்.. கையும் களவுமாக பிடிபட்ட 24 பேர்
பாட்னா: பீகாரில் நடைபெற்ற நீட்-யுஜி (NEET-UG) மறுதேர்வின் போது, முறைகேடுகளில் ஈடுபட முயன்ற கும்பலை போலீஸார் கண்டறிந்துள்ளனர். தேர்வர்களுக்குப் பதிலாக போலி ஆட்களை தேர்வு எழுத வைத்ததாகக் கூறி, மருத்துவ மாணவர்கள் மற்றும் பயோமெட்ரிக் நிறுவன ஊழியர்கள் உட்பட 24 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதன்பின்னர் மறு தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. இதில் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற நிலையில் இந்த தேர்விலும் முறைகேடு கும்பல் பிடிபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கயாவில் உள்ள ஏ.என்.எம்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மாணவரான அர்பித் ராஜ், இந்த முறைகேட்டுப் பின்னணியின் மூளையாக செயல்பட்டு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இவர் ஏற்கனவே 2024 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயோமெட்ரிக் நிறுவன ஊழியர்கள் கைது
பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவரான மயங்க் காஷ்யப் என்பவரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பயோமெட்ரிக் நிறுவனத்தைச் சேர்ந்த 14 ஊழியர்களும் இந்த விசாரணையின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயங்க் காஷ்யப் என்பவர் தன்னை பயோமெட்ரிக் நிறுவன ஊழியர் எனத் தவறாக அடையாளப்படுத்திக் கொண்டு, ஹசன்பூர் உயர்நிலைப் பள்ளி தேர்வு மையத்திற்குள் நுழைய முயன்றபோது இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, லக்கிசராய் பகுதியில் உள்ள கே.ஆர்.கே மேல்நிலைப் பள்ளி மற்றும் கேந்திரிய வித்யாலயா ஆகிய இடங்களில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, முறைகேட்டில் ஈடுபட முயன்ற 7 தேர்வர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த பலரை போலீஸார் கைது செய்தனர்.
பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கைது
விசாரணையில், இந்த கும்பல் தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்ய திட்டமிட்டுள்ளதும், இதில் பல்வேறு மருத்துவ மற்றும் செவிலியர் பயிலும் மாணவர்களின் பங்களிப்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (BHU) செவிலியர் பயிலும் மாணவி பூனம் குமாரி என்பவர் மற்றொருவருக்குப் பதிலாக தேர்வு எழுதும்போது பிடிபட்டார். எய்ம்ஸ் ரேபரேலி மாணவர் சௌரவ் ஜா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், டெல்லி ஷாதரா மருத்துவக் கல்லூரியின் பயிற்சி மருத்துவர் அமன் அகர்வால், நாலந்தா மருத்துவக் கல்லூரி செவிலியர் படிப்பு மாணவர் சஞ்சீத் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்வு காலத்தில் மருத்துவ மாணவர்கள் தங்களது வளாகத்தை விட்டு வெளியேறக்கூடாது என்று கல்லூரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்த போதிலும், இவர்கள் இந்த முறைகேட்டில் பங்கேற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களைக் கண்காணிக்க கருத்தரங்குகள் மற்றும் போட்டிகளை பாட்னா மருத்துவக் கல்லூரி போன்ற நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்தும், சிலர் உடல்நிலை சரியில்லை என்று பொய் கூறிவிட்டு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். மயங்க் காஷ்யப் உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்துக்கொண்டே லக்கிசராயில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த முறைகேடு நெட்வொர்க்கின் முழு பின்னணியையும் கண்டறிய பீகார் போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.














Click it and Unblock the Notifications