மாணவி சத்யாவுக்கு நேர்ந்த துயரம்.. "நொறுங்கி போய்விட்டேன்" முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை!
சென்னை: சென்னை மாணவி சத்யாவுக்கு ஏற்பட்ட துயரத்தை அறிந்து நொறுங்கி போய்விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா, ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் சென்னை முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பின்னர் நள்ளிரவில் துரைப்பாக்கம் கிழக்கு கடற்கரை பகுதியில் சுற்றித் திரிந்த, கொலையாளி சதீஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சிறையில் அடைப்பு
இதனைத்தொடர்ந்து அவரை அக்.28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து நொறுங்கி போய்விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் பேச்சு
ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரியில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சென்னையில் மாணவி சத்யாவுக்கு ஏற்பட்ட துயரத்தை அறிந்து நொறுங்கி போய்விட்டேன். இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழகத்தில் நிகழக் கூடாது. இதுபோல் மீண்டும் நடக்காமல் தடுக்க வேண்டிய கடமை சமூகமாக நமக்கு இருக்கிறது.

சமூகக் கல்வி
தங்கள் பிள்ளைகள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அறிவாற்றலோடும் திறமையோடும் சமூக நோக்கம் கொண்டவர்களாக பெற்றோர் வளர்க்க வேண்டும். பாடப் புத்தக கல்வி மட்டுமல்ல, சமூக கல்வியும் அவசியமானது. நல் ஒழுக்கமும், பண்பும் மிக்கவர்களாக வளர்ந்து வாழ்ந்து சமூக பங்களிப்பை வழங்க வேண்டும். குழந்தைகள் எந்த வகையிலும் திசை மாறி செல்லாத வகையில், வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது.

பெண்கள் பாதுகாப்பு
இயற்கையில் ஆண் வலிமை மிக்கவனாக இருக்கலாம். அந்த வலிமை பெண்களை பாதுக்காக்க கூடியதாக இருக்க வேண்டும். சில இளைஞர்கள் எப்படி வளர்கிறார்கள் என்பது இதுபோன்ற சம்பவங்கள் மூலம் தெரிகிறது. பள்ளி, கல்லூரி, பெற்றோர் சேர்ந்து இளைஞர்களை பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்படி பாதுகாக்கப்படும் இளைஞர்கள் சக்திக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications