ஓடவில்லை.. ஒளியவில்லை.. என் உடலில் எவ்வளவு பிரச்சனை இருக்கு தெரியுமா.. எ.வ.வேலு பரபரப்பு விளக்கம்
சென்னை: ரூ.3.23 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து ரெய்டு நடத்தினார்கள். காவல்துறை விசாரணைக்கு ஆஜராக சொல்லி வேலுவுக்கு சம்மனும் கொடுக்கப்பட்டது. சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சையில் இருந்ததால் வேலு ஆஜராகவில்லை. இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு வேலு சென்னை திரும்பினார். தனக்கு உடலில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன, என்ன சிகிச்சை எடுத்தோம் என்றும் காவல்துறைக்கு வழங்கிய பதில் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ வேலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "எனக்கு அலர்ஜி, இதயம், நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு முதலே சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் ஜெயராமன் என்பவர் மூலமாக அங்கு சிகிச்சை பெற்று வருகிறேன்.

சிங்கப்பூரில் சிகிச்சை
2023 ஆம் ஆண்டும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். கடந்த 5 வருடங்கள் இரவு பகலாக வேலை செய்தோம். தேர்தலுக்கு பிறகு மீண்டும் பரிசோதனை செய்ய திட்டமிட்டேன். கடந்த மாதம் 15 ஆம் தேதி சிங்கப்பூர் செல்வதற்கான விசாவுக்கு விண்ணப்பித்தேன். 17 ஆம் தேதி எனக்கு விசா கொடுத்தனர். 25 ஆம் தேதி மதியம் சிங்கப்பூர் செல்வதற்காக 17 ஆம் தேதியே இண்டிகோ விமானத்திற்கு டிக்கெட் போடப்பட்டுள்ளது. 25 ஆம் தேதி காலை காவல்துறையினர் என் வீட்டிற்கு வந்தனர்.
உங்கள் வீட்டை சோதனை செய்ய ஒத்துழைப்பு தர கேட்டனர். தாராளமாக ஒத்துழைப்பு தருகிறேன் என்று கூறினேன். விசாரணைக்கு வந்த ஏடிஎஸ்பி புகழ்வேந்தன் என்பவரிடம் சிங்கப்பூர் செல்வதற்கான டிக்கெட்டை காட்டினேன். சோதனை முடிந்தவுடன் நான் அதற்கான விளக்கத்தை அளித்தேன். சோதனையில் 25 ஆம் தேதிக்கு பதிலாக 26 ஆம் தேதி சிங்கப்பூர் சென்றேன். அங்கு எனக்கு மருத்துவ சிகிச்சை தொடங்கி நடைபெற்றது.
காவல்துறைக்கு பதில்
நரம்பியல் டாக்டர் லி கிம் பென், வயிறு பிரச்சனைக்காக டாக்டர் பீட்டர் யங் கென், அலர்ஜி டாக்டர் செங் எங் குவான், இதயம் தொடர்பாக டாக்டர் ஜெயராமன் ஆகிய டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றேன். எந்த டாக்டரிடம் எப்போது ஆலோசனை பெற்றேன், என்ன மருந்து கொடுத்துள்ளனர் என்பதற்கான சமரி இருக்கிறது. இசிஜி, ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து ரிப்போர்ட்களும் கையில் வைத்துள்ளேன். கடந்த 3 ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பினார்கள்.
மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் அவகாசம் கேட்டேன். இது தொடர்பாக வணக்கம், என்மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக மருத்துவ சிகிச்சை இருப்பதால் 10 நாட்களில் விசாரணைக்கு வருகிறேன். 12 ஆம் தேதிக்கு பிறகு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று வக்கீல் மூலம் கடிதம் அனுப்பி கூறினேன். மீண்டும் கடந்த 9.7.2026 விசாரணைக்கு வர சொல்லி நோட்டீஸ் அனுப்பினார்கள். நான் சுற்றுலாவுக்கோ அல்லது யாருக்கு அஞ்சியோ செல்லவில்லை.
கற்பனை கதைகள்
சில நண்பர்கள் கற்பனை கதைகளை கூறி வந்தனர். நான் ஓடவில்லை, ஒளியவில்லை, பதுங்கிவில்லை. இது அர்த்தமற்ற விமர்சனம். என்னை திமுக கொறாடாவாக தலைவர் நியமித்துள்ளார். அதை பேரவை தலைவர் அங்கீகரித்துள்ளார். 3 நாள் சட்டமன்ற கூட்ட தொடரில் என் கடமையை நான் செய்தேன். நான் பேசவே கூடாதா என்று அவர்கள் நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. நான் எந்த குற்றமும் செய்யவில்லை. நீதி என் பக்கம் உள்ளது. நீதிமன்றம் எனக்கு நல்ல தீர்ப்பு வழங்கும் என்கிற நம்பிக்கை உள்ளது" என்றார்.














Click it and Unblock the Notifications