"பலிஆடு".. வாசப்படியில் சந்திரலேகா கேட்ட கேள்வி.. வாயடைத்து போன ஜெயலலிதா.. "வில்லி" சசிகலா?.. மணி நச்
சசிகலா + ஜெயலலிதா இருவரின் நட்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி நமக்கு பேட்டி தந்துள்ளார்
சென்னை: பெரும்பாலும் சசிகலாவை வில்லியாக சித்தரித்து, அவர்மீது நிறைய குற்றச்சாட்டுகளை சொல்ல முடியும்.. ஆனால், சசிகலா இல்லாவிட்டால் ஜெயலலிதா கிடையாது என்பதை மறந்துவிடக்கூடாது என்று மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவோடு இணைந்து சசிகலா ஆடம்பர வாழ்க்கையை மட்டுமில்லாமல் நெருக்கடி காலத்தையும் சேர்ந்து ஒன்றாக கழித்தவர்.. ஜெயலலிதாவுடன் சசிகலாவும் கைதானவர்.
வளர்ப்பு மகன் தத்தெடுத்தது துவங்கி, சசிகலா குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தியது வரை எல்லாம் சசிகலாவால்தான் என சொல்லப்பட... அதுவே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சசிகலாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜெயலலிதா அறிவித்தார்,
சபரிமலை செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்களே..உங்களுக்கு உதவ தகவல் மையம்..கட்டணமில்லா தொலைபேசி
ஸ்பெஷல்ஸ்
ஆனால் அடுத்த சில நாளிலேயே, எனது உடன்பிறவா சகோதாரி சசிகலா என்றார்.. "சசிகலா எப்பவுமே என்னோடுதான் இருப்பார். அவரைப்பற்றிய எந்த கேள்வியும் அவசியமற்றது என்று வெளிப்படையாகவே சொல்லியவர் ஜெயலலிதா.. கிட்டத்தட்ட 32 ஆண்டுகால நட்பின் அடிப்படையில் இவர்கள் இணைபிரியாமல் இருந்தனர். இந்நிலையில், ஜெயலலிதாவுடன் சசிகலாவின் உறவு எந்த அளவுக்கு வலுப்பெற்று இருந்தது என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி நம்மிடம் பகிர்ந்து கொண்டார். ஒன் இந்தியா தமிழுக்கு மணி அளித்த ஸ்பெஷல் பேட்டிதான் இது:
தயாளு அம்மாள்
"அப்போதெல்லாம் விளையாட்டாக சொல்வார்கள், கலைஞர் ஆட்சியில் 10 பவர் சென்டர்கள், அதாவது கலைஞர், தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், கனிமொழி, மாறன் சகோதரர்கள், ஸ்டாலின் இப்படி 10 பவர் சென்டர்கள் என்றால், ஜெயலலிதா ஆட்சயில் ஒரே ஒரு பவர்சென்டர், சசிகலா மட்டுமே என்று சொல்வார்கள்.. அந்தம்மாவுக்கு பதவி இல்லாதபோது, எல்லாரும் போய்விட்டபிறகு, சசிகலா அவரை நட்டாற்றில் கைவிட்டு போகவில்லை..
வாஷ்அவுட்
இன்னைக்கு சசிகலா, தன்னை தானே பொதுச்செயலாளர், சின்னம்மா, புரட்சித்தாய் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, அதை அவங்க டிவியிலேயே போட்டுக் கொண்டு இருக்கிறாரே தவிர, தொண்டர்கள் ஆதரவு என்பது சுத்தமாக இல்லை.. சசிகலா இன்னைக்கு வாஷ்அவுட்.. கட்சி இப்போ எடப்பாடிக்கிட்டதான் இருக்கு.. 1991-96 என்பது தமிழக அரசியலின் கரும்பக்கங்களில் ஒன்று.. எல்லா ஜனநாயக உரிமைகளும் காலின்கீழ் போட்டு திணிக்கப்பட்டன.. ஐஏஎஸ் ஆபீசர்கள் முகத்தில் ஆசிட் ஊற்றினார்கள்.. 1991-ல் கோலோச்ச ஆரம்பித்தவர் சசிகலா..
பலிகடா
சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீச்சு சம்பவத்தில் சசிகலாவுக்கு தொடர்பு இருந்ததாகவும், சசிகலா சொல்லியே அது நடந்ததாகவும் சொல்லப்பட்டது.. ஆனால், அது தவறான கருத்து.. அதை யார் செய்தார்கள் என்று இன்னைக்கு வரைக்கும் தெரியவில்லை.. ஆனால், ஜெயலலிதா காலத்தில் நடந்த எல்லா அட்டூழியங்களுக்கும் சசிகலாதான் பலிகடா ஆக்கப்பட்டார்.,. ஆனால், சசிகலாவுக்கும் தெரியாமல் சில விஷயங்கள் அப்போது நடந்தது.. அதை நேரடியாகவே, ஜெயலலிதாவின் மேற்பார்வையிலேயே நடந்ததாக ஒரு வலுவான கருத்தும் உண்டு..
எய்ட்ஸ் சுர்லா
சந்திரலேகா விவகாரத்தில் யார் ஈடுபட்டார்கள் என்று இன்றுவரை தெரியாது.. மதுசூதனை அழைத்து சென்று விசாரித்து பார்த்தார்கள்.. அப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை.. அதனால் அவரை விடுவித்துவிட்டார்கள்.. அதேசமயம் நேரடியாக அரசு தாக்கல் நடத்தின சுர்லா, எய்ட்ஸ் வந்து செத்து போயிட்டான்.. இன்னும் சிலர் தண்டிக்கப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியாது.. 1996-ல் ஜெயலலிதா தோற்று, பிறகு 1998 பிப்ரவரியில் மெகா கூட்டணி உருவானது.. அதிமுக + பாமக + மதிமுக + சுப்ரமணிய சாமியின் ஜனதா கட்சி + வாழப்பாடியின் ராஜீவ் காங்கிரஸ் கூட்டணி வைத்தார்கள்... அப்போது ஜெயலலிதா ஒவ்வொரு கட்சி ஆபீசுக்கும் மரியாதை நிமித்தமாக சென்றார்..
வாழப்பாடி ராமமூர்த்தி
தேனாம்பேட்டையில் இருந்த பாமக அலுவலகத்துக்கு போனார்.. எக்மோரில் மதிமுக அலுவலகத்துக்கு போனார்.. ராஜா அண்ணாமலைபுரத்தில் வாழப்பாடி ராமமூர்த்தி அலுவலகத்துக்கு போனார்.. சாந்தோமில் சுப்பிரமணிய சாமி அலுவலகத்துக்கு போனார்.. சுப்பிரமணியசாமியுடன்தான் சந்திரலேகாவும் இருந்தார்.. அந்த அலுவலகத்துக்கு சென்ற ஜெயலலிதா 20 நிமிஷம் இருந்துவிட்டு, டீ சாப்பிட்டுவிட்டு, சு.சாமி, சந்திரலேகா, சசிகலா, ஜெயலலிதா வெளியே வந்தார்கள்... அப்போது சந்திரலேகாவுக்கு மனசே ஆறல..
ஷாக் ஜெயலலிதா
அப்போது ஜெயலலிதாவிடம், "எல்லாம் சரி ஜெயா, என் மேல ஆசிட் ஊற்றினதுக்கு யார் காரணம்? உண்மையான குற்றவாளியை இப்போவாவது சொல்லுங்களேன்" என்று கேட்டார்.. அதைக்கேட்டதுமே ஜெயலலிதா ஷாக் ஆகி நின்றுவிட்டார்.. எல்லாம் நல்லா போய்ட்டு இருக்கும்போது இந்த பிரச்சனையை கிளப்புகிறார்களே என்று நினைத்தார்.. ஏனென்றால், சந்திரலேகா மீது ஆசிட் ஊற்றப்பட்டது ஜெ.ஆட்சியில்தான்.. அந்த ஆசிட் வீச்சு காரணம், ஜெ.அரசு என்ற சந்தேகங்கள் பரவலாக பரவிய நிலையில், திடுதிப்பென்று, அதே ஜெயலலிதாவுடன் ஜனதா தளம் கூட்டணி வைத்திருக்கிறதே என்று தமிழ்நாடே ஆச்சரியப்பட்டது.
கன்ட்ரோல் யார்
சந்திரலேகா அப்படி ஒரு கேள்வியை கேட்டதுமே வாயடைத்து போய் நின்றார் ஜெயலலிதா.. பிறகு சந்திரலேகாவிடம், "அந்த சம்பவத்தை செய்தது, நீங்க நினைக்கிறவர் இல்லை, யார் செய்தார்கள் என்பதை நான் பேசவும் விரும்பல.. இதுக்கு மேல என்னால எதுவும் சொல்ல முடியாது.. ஆனால், ஒன்று மட்டும் சொல்கிறேன், கடந்த காலத்தில் நடந்ததை நினைத்துக் கொண்டு இருந்தால், எதிர்காலத்தில் நம்மால் வாழ முடியாது.. அதையெல்லாம் மறந்துவிட்டு, கடந்து வர பாருங்கள்" என்று சொல்லி உள்ளார்.
வில்லி ரோல்
அதற்கு பிறகு சந்திரலேகா எதுவுமே பேசவில்லை.. ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.. அந்த நிகழ்வின்போது அங்கிருந்தவர் என்னிடம் சொல்லிய தகவல் இது.. எனவே, இந்த விஷயத்தில் சசிகலாவை குற்றம்சாட்ட முடியாது.. பெரும்பாலும் சசிகலாவை வில்லியாக சித்தரித்து நிறைய குற்றச்சாட்டுகளை சொல்ல முடியும்.. ஆனால், சசிகலா இல்லாவிட்டால் ஜெயலலிதா கிடையாது என்பதையும் மறந்துவிடக்கூடாது" என்றார்.