Private Cabins in trains: இந்திய ரயில்களில் இனி தனி அறை! பிரைவசி பறிபோகாது! ஐசிஎஃப் திட்டம்
சென்னை: இந்திய ரயில்களில் விரைவில் தனிப்பட்ட அறைகளுடன் கூடிய வசதிகளை ஐசிஎஃப் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. எந்தெந்த பெட்டிகளில் இந்த அறைகள் அமைக்கப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இதுகுறித்து தமிழ் ரயில் தகவல்கள் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்திய ரயில்களில் விரைவில் தனிப்பட்ட அறைகள்: ஐ.சி.எஃப்-இன் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்திய ரயில்வே, அதன் வருவாயை உயர்த்துவதுடன் பயணிகளுக்கு மேம்பட்ட தனியுரிமை (Privacy) மற்றும் வசதியை வழங்கும் நோக்கத்துடன், ரயில் பெட்டிகளில் தனிப்பட்ட சிறிய அறைகளை (Individual Cabins/Rooms) உருவாக்கும் திட்டத்தை பரிசீலித்து வருகிறது. இந்தத் திட்டம் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற இந்திய ரயில்வேயின் டெக்னிக்கல் சூப்பர்வைசர்ஸ் சங்கம் (IRTSA) மாநாட்டில் ஆலோசனை நடத்தப்பட்டது.
வருவாய் உயர்வு
இரண்டாம் ஏசி மற்றும் மூன்றாம் ஏசி பெட்டிகளில் 25% வரையிலும், இரண்டாம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளில் 10% வரையிலும் சிறிய அளவிலான தனிப்பட்ட அறைகளை உருவாக்குவதன் மூலம், ரயில்வே நிர்வாகம் ஆண்டுக்கு ₹2,600 கோடி வரை கூடுதல் லாபம் ஈட்ட முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பயணிகள் தனியுரிமை
தனிப்பட்ட அறைகள் பயணிகளுக்கு அதிகப்படியான தனியுரிமையுடன் கூடிய புதிய பயண அனுபவத்தை வழங்கும்.
காலக்கெடு
இந்தத் திட்டத்துக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்பட்டு, அடுத்த ஓரிரு வருடங்களில் ரயில் பெட்டிகளில் இந்தப் புதிய அறைகள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி மேம்பாடுகள்
மேலும், சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப் (ICF) ரயில் பெட்டி தொழிற்சாலையில் உற்பத்திச் செலவு மற்றும் நேரத்தைக் குறைப்பதற்காக, லேசர் வெல்டிங் (Laser Welding) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இது பெட்டிகளின் தரத்தை மேம்படுத்துவதோடு, ஒரு ரயில் பெட்டியில் சுமார் 500 கிலோ வரை எடையைக் குறைக்கவும் உதவும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வது ஐசிஎஃப் தொழிற்சாலை. இது சென்னை பெரம்பூரில் உள்ளது. ரயில் பெட்டிகள் உருவாக்கத்தில் என்னென்ன மேம்பாடுகளை செய்ய வேண்டும், அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவது, ரயில்வே துறையில் ஆண்டு வருமானத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து சென்னையில் நடந்த இந்திய ரயில்வேயின் டெக்னிக்கல் சூப்பர்வைசர்ஸ் சங்கம் (IRTSA) மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.
லேசர் வெல்டிங் செய்வதால் 22 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலின் மொத்த எடையை 11 டன்னாக குறைக்கமுடியும் என்கிறார்கள். மேலும் ஒவ்வொரு பெட்டிக்கும் ரூ.1 லட்சம் மதிப்பிலான இரும்பு செலவும் குறையும்.












Click it and Unblock the Notifications