கூட்டணியில் இருந்து போனால் போகட்டும்.. அவர்களின் விருப்பம்.. டெல்லி தான் முடிவு எடுக்கும்.. அண்ணாமலை
சென்னை: பாஜகவுடனான கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், கூட்டணியில் இருந்து போனால் போகட்டும் அது அவர்களது விருப்பம் என்றும் கூட்டணி குறித்து கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அண்மையில் அதிமுக அறிவித்தது. அறிஞர் அண்ணா, ஜெயலலிதா குறித்த அண்ணாமலை விமர்சித்தது ஏற்றுக்கொள்ள முடியாது என மிக காட்டமாக விமர்சித்து வந்த அதிமுக, பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டதற்கும் இதையே காரணமாக சொன்னது. அதிமுக உடன் மீண்டும் கூட்டணியை ஏற்படுத்த பாஜக தலைமை ஆர்வம் காட்டுவதாக சொல்லப்பட்டாலும் இதற்கு அதிமுக பிடி கொடுக்காமலேயே பேசி வருகிறது.

வரும் 2024 மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி கிடையாது என அதிமுக அழுத்தி கூறியது. அதிமுக உடன் கூட்டணியை தொடர விரும்புவதாக விபி துரைசாமி கூறியதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, பாஜக உடன் கூட்டணியை முறித்துக்கொண்டது தொண்டர்கள் எடுத்த முடிவு என உறுதியாக கூறினார். பாஜக கூட்டணியை விட்டு விலகியதில் உறுதியாக இருப்பதாக அதிமுக கூறி வரும் நிலையில், அண்ணாமலைக்கு ஏகப்பட்ட பிரஷர் ஏற்பட்டு இருக்கிறது. அண்ணாமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார்.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை அவர் யாரையும் சந்திக்கவில்லை. அங்கே வெறுமனே காக்க வைக்கப்பட்டார். அதன்பின் மறுநாள் அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அதில்.. அதிமுக பாஜக கூட்டணி முறிவிற்கு என்ன காரணம்? அதிமுக - பாஜக கூட்டணி முறிவால் என்ன சாதகம்? பாஜக தலைமையில் எப்படி கூட்டணி அமைப்பது? பாஜக தலைமையில் கூட்டணி அமைத்தால் என்னென்ன சாதகங்கள் ஏற்படும்? என்ற ரிப்போர்ட் ஒன்றை அண்ணாமலை அளித்துள்ளார்.
அதிமுக கூட்டணி முறிவு குறித்து டெல்லி தலைமையிடம் அறிக்கை அளித்த அண்ணாமலை, தமிழ்நாடு திரும்பியதும் உடல் நலம் பாதிப்பு காரணமாக தனது நடைபயணத்தை ஒத்திவைத்தார். உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தாலும் சென்னையில் இன்று நடைபெற்ற பாஜக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்றார். அண்ணாமலை பேசுகையில், தேர்தல் கூட்டணி குறித்து என் கருத்தை நான் ஏற்கனவே கூறிவிட்டேன்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பாஜக கட்சி தலைமை முடிவு செய்யும். கூட்டணி தொடர்பாக டெல்லி தலைமை முடிவு எடுக்கும். கூட்டணியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். தனித்து செயலாற்றுவதற்கு கட்சி நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும். கூட்டணியை விட்டு பிரிந்து சென்றவர்களை பற்றி யோசிக்க வேண்டாம். கூட்டணியை விட்டு பிரிந்து சென்றவர்கள் பற்றியோ, பாஜகவை கூட்டணியில் இருந்து விலக்கியவர்களை பற்றியோ பேசுவதற்கான நேரம் இதுவல்ல. அதற்கான தேவையும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications