எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி; பாஜகவுக்கு வந்தால் ரத்தமா? பீட்டர் அல்போன்ஸ் செம கலாய்
சென்னை; கர்நாடக நீதிமன்றம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது விசாரணை நடத்த அனுமதியளித்திருப்பதன் மூலம் நீதிமன்றத்தின் இறையாண்மை மீண்டும் ஒருமுறை காப்பாற்றப்பட்டுள்ளதாக பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா முடா நில வழக்கில் சிக்கி இருக்கிறார். அவர் மீது விசாரணைக்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். ஆகவே அவர் பதவி விலகவேண்டும் என பாஜக வலியுறுத்தி வந்தது. ஆனால், அவர் தன் மீதான குற்றச்சாட்டுக்காகப் பதவி விலகப்போவதில்லை என்றும் முதலில் பிரதமர் மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் பதவி விலக முன்வந்தால் நானும் பதவியைவிட்டு இறங்கத் தயார் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.

இதற்கு முன்பாக தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் இந்தத் திட்டமே சட்டவிரோதமானது என அறிவித்தது. மேலும் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நன்கொடைகளைப் பெற்றுள்ளன என்பதை வெளிப்படையாக அறிவிக்க உத்தரவும் பிறப்பித்தது. அதன் மூலம் பாஜக 6 ஆயிரம் கோடிக்கு மேல் நன்கொடை பெற்றது அம்பலமானது. அதைப்போன்று திமுகவும் லாட்டரி உரிமையாளர் மார்ட்டினிடம் பெற்ற நன்கொடை தொடர்பாகச் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில்தான் கர்நாடக நீதிமன்றம் இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கருத்து கூறிய காங். முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ், "எனக்கு வந்தால் ரத்தம். உனக்கு வந்தால் அது தக்காளி சட்னி என்ற அணுகுமுறையைத்தான் பாஜக பல விவகாரங்களில் கடைப்பிடித்து வருகிறது. விசாரணை வளையத்தில் உள்ளவர்கள் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை முன்பாக வைத்த கட்சி பாஜக. காங்கிரஸ் அல்ல. அவர்கள் வழக்கில் சிக்கும்போது யாரும் ராஜினாமா செய்வதில்லை. எதிர்க்கட்சியாக இருந்தால் ராஜினாமா செய்ய வேண்டும் என அழுத்தம் தருகிறார்கள்.
விசாரணை வளையத்திற்குள் உள்ளவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒரு வார்த்தை ஏற்றுக் கொண்டால் கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் உள்ள குமாரசாமி ராஜினாமா செய்யவேண்டும். எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டும். எதிர்க்கட்சி என்றால் ஒரு நியாயம்? ஆளும் கட்சி என்றால் மற்றொரு நியாயமா? அதைத்தான் கர்நாடக முதல்வர் சித்தராமையா கேட்கிறார். அவர் கேள்வி நியாயமானது.

"தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜக பெற்ற நிதி தொடர்பான பல கேள்விகள் அல்லது சந்தேகங்கள் தொடர்ந்து பொதுத் தளத்தில் விவாதிக்கப்பட்டுதான் வருகின்றன. அமலாக்கத்துறை எந்தெந்த நிறுவனங்கள் மீது விசாரணை நடத்தியதோ அந்த நிறுவனங்களிலிருந்து பாஜக நன்கொடையாகப் பெற்றுள்ளது. அதுவும் ரெய்டு நடந்த அடுத்த நாளே இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக முறையாகப் பதிலளிக்கவில்லை. எனவேதான் கர்நாடக நீதிமன்றம் நிதியமைச்சர் மீது வழக்குத் தொடர அனுமதியளித்துள்ளது. சட்டத்தின் முன் யாராக இருந்தாலும் அவர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும். நாட்டின் நிதியமைச்சராக உள்ள ஒருவர் மீது வழக்குத் தொடர நீதிமன்றம் மிகத் தைரியமாக ஒப்புதல் அளித்துள்ளது. இது சட்டத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக நான் கருதுகிறேன்.
முன்பே சொன்னதைப்போல இதற்கு முன்னர் நீதிமன்ற விசாரணையில் உள்ளவர்கள் பதவி வகிக்கக் கூடாது என்ற ஒரு கோரிக்கையை பாஜகதான் முதன்முதலாக முன்வைத்தது. அதனடிப்படையில் இப்போது நிதியமைச்சர் மீது விசாரணை நடைபெற உள்ளது. அவரும் பாஜக தேசிய தலைவர் நட்டாவும் பதவி விலக வேண்டும். விசாரணை முடிந்து அவர் குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்பட்டால் மீண்டும் பதவியேற்றலாம். தவறில்லை.
இந்த வழக்கில் பல புதிய முடிச்சுகள் அவிழ்க்கப்படும். பல மாநிலத்தில் உள்ள மத்திய அமைச்சர்கள் இந்த வழக்கில் சிக்குவர். அதேபோல முதல்வர்கள் வழக்கில் சேர்க்கப்படலாம். அதற்கான முகாந்திரம் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications