10 பவுன் தங்கம் கடந்த ஆண்டு இதேநேரம் வாங்கி போட்டிருந்தால்.. இப்போது எவ்வளவு லாபம் தெரியுமா?
சென்னை: தங்கம் விலை தற்போது சற்று குறைந்திருந்தாலும், 72000 என்கிற அளவில் தான் இப்போதும் இருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது கிட்டத்தட்ட 20 ஆயிரம் ரூபாய்அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதேநேரத்தில் யாராவது 10 பவுன் தங்கம்வாங்கி போட்டிருந்தால் இரண்டு லட்சம் ரூபாய் லாபம் கிடைத்திருக்கும். 20 பவுன் தங்கம் வாங்கி போட்டிருந்தால் கிட்டத்தட்ட நான்கு லட்சம் ரூபாய் லாபம் கிடைத்திருக்கும். தற்போதைய நிலையில் ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் தான் அதிக பாதுகாப்பான முதலீடாக இருக்கிறது.குறிப்பாக தங்கம் மிகவும் பாதுகாப்பான முதலீடாக இருக்கிறது.
தங்கம் விலை கடந்த ஆண்டு இதே ஏப்ரல் 28ம் தேதி அன்று ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 685 ரூபாய் ஆகவும், அதாவது ஒரு பவுன் ரூ.53 ஆயிரத்து 480-க்கு விற்பனை ஆகியது. ஆனால் 2025ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதியான இன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 8940க்கும் அதாவது ஒரு பவுன் ரூ.71 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டு ரூ.18 ஆயிரத்து 40 அதிகமாகும். கடந்த இரண்டு நாள் முன் ஒப்பிட்டால் கிட்டத்தட்ட 20 ஆயிரம் என்கிற அளவிற்கு அதிகம் ஆகும். இதேபோல் கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது தங்கம் விலை 20 ஆயிரம் அளவிற்கு அதிகமாக உள்ளது.

கடந்த ஆண்டை விட நடப்பாண்டு தங்கத்தின் விலை அதிகரித்திருந்தாலும் பொதுமக்களுக்கு தங்கத்தின் மீது நம்பிக்கை அதிகரித்து வருகிறது. வரும் அட்சய திருதியை அன்று நகை வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.இந்த அட்ச திருதியைக்கு தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு அட்சய திருதியை அன்று செய்கூலி, சேதாரத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
அத்துடன் முன்பதிவு செய்த நாளில் இருந்து அட்சய திருதியை நாளுக்குள் எந்த நாளில் விலை குறைவாக இருக்கிறதோ? அந்த நாள் விலைக்கு அட்சயதிருதியை அன்று நகையை வாங்கி கொள்ளும் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.எனவே ஒருவேளை நாளை மறுநாள் தங்கம் விலை உயர்த்தாலும், இன்றைய விலைக்கு வாங்கி கொள்ள முடியும். தங்கம் விலையை கணக்கிட்டு பார்த்தால் கடந்த ஆண்டு 10 பவுன் வாங்கியிருந்தால் இப்போது 2 லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்திருக்கும்.
குறைந்தது ஐந்து பவுன் வாங்கியிருந்தால் கூட ஒரு லட்சம் லாபம் கிடைத்திருக்கும். அதேபோல் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தனிநபர் கடனில் ஐந்து லட்சத்திற்கு நகை வாங்க நினைத்திருந்தால் 12 பவுன் தங்க நகை வாங்கியிருக்க முடியும். ஆனால் இப்போது அதே காசிற்கு 6.5 பவுன் தங்க நகை தான் வாங்க முடியும். தங்கத்தை போல் கடந்த ஐந்து ஆண்டுகளில் எதிலும் கிடைத்ததா என்பது தெரியவில்லை என்கிறார்கள் சாமானிய மக்கள். தற்போதைய நிலையில் தங்கம் விலை குறைந்தாலும் மீண்டும் பெரிய அளவில் உயரும் என்றே சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications