மின் கட்டணம் இந்த மாதமே மாறுது.. உங்கள் வீட்டில் இரண்டு மின் இணைப்பு இருக்கா.. உடனே பாருங்க
சென்னை: தமிழக மின்சார வாரியம் தேவையற்ற மின் இழப்புகளை தடுக்க புதிதாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மின் திருட்டுகள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வரும் அதேநேரத்தில், ஒரே வீட்டுக்கு இரண்டு மின் இணைப்பு இருந்தால், அதை கணக்கீடு செய்வதில் புதிய நடைமுறை இம்மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மின் கட்டணம் கடந்த ஜூலை 1ம் தேதி முன் தேதியிட்டு உயர்த்தப்பட்டது. முன்னதாக 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 26.73 சதவீதம் (ஒரு மாதக் கட்டணத்துக்கு) வரையில் மின் கட்டணத்தை மின்சார வாரியம் உயர்த்தியது. அதேநேரம் மத்திய அரசு நிதியைப் பெற ஆண்டுக்கு ஒருமுறை மின் கட்டணம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்ற மத்திய மின்துறை வழிகாட்டுதலின்படியே மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அப்போது கூறியது.

கடந்த ஆண்டு வீட்டு உபயோக மின் கட்டணம் 2.18% அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசே அதை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. அதேநேரம் கடந்த ஆண்டு சிறு, குறு தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் மற்றும் இதர பயன்பாட்டுக்கான மின் கட்டணம் கணிசமாக அதிகரித்தது.
அதன் பிறகு, மூன்றாவது முறையாக கடந்த ஜூலை 1 முதல் மின்சார கட்டணத்தை உயர்த்தும் அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது. அதன்படி, வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 20 முதல் 55 காசுகள் வரை அதிகரித்தது. மின் கட்டணத்தை உயர்த்தினாலும் மின்வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறது. மின்வாரியம் நஷ்டத்தை சரி செய்யும் விதமாக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மின் இணைப்பு விவகாரத்தில் ஏற்படும் இழப்பை சரி செய்ய புதிய முடிவு செய்துள்ளதாம்.
அதன்படி, தமிழ்நாட்டில் ஒரு வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால், அதை ஒரே மின் இணைப்பாக ஒருங்கிணைத்து, ஒரே கட்டணமாக கணக்கீடு செய்யும் புதிய நடைமுறை இம்மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரு வீட்டில், இரு மின் இணைப்பு இருந்தால், ஒருங்கிணைந்த இணைப்பாக கருதி, மின் கட்டணத்தை கணக்கிடும் வகையில், 'சாப்ட்வேர்' மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏன் இந்த முடிவு: ஒவ்வொரு வீட்டு இணைப்புக்கும் ஒவ்வொரு பில் கணக்கீட்டின் போது, 100 யூனிட் இலவசம் ஆகும்.அதேநேரம் ஒரு வீட்டுக்கு, இரு இணைப்பு பெற்றிருந்தால், தலா, 100 யூனிட் இலவசமாக கிடைக்கும். அதேபோல், ஒரே வணிக கட்டிடங்களுக்கு இரு இணைப்பு இருக்கும் போது, மின் கட்டணமும் குறைவாக வரும்.
இத்தகைய விஷயங்களை சரி செய்தால் மின் வாரிய இழப்பை தடுக்க முடியும் என்பதால், இது தொடர்பாக கணக்கெடுப்புகள் நடந்து வந்ததாம். தற்போது இத்தகைய இணைப்புகள் கண்டறியப்பட்டு ஒரே இணைப்பாக ஒருங்கிணைத்து, மின் கட்டணம் கணக்கிடப்பட உள்ளதாம் ஒரே வீட்டுக்கு இரு மின் இணைப்பு இருந்தால், 100 யூனிட் மட்டுமே கழித்து, மற்ற யூனிட்டுகளுக்கு கட்டணம் விதிக்கப்படுமாம்.கடைகளுக்கும், இரு மீட்டரில் உள்ள யூனிட்டுகளை கணக்கிட்டு, மொத்தமாக மின் கட்டணம் விதிக்கப்படுமாம். இதனால், நீண்டகால வருவாய் இழப்பு தடுக்கப்படும் என்று மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன..












Click it and Unblock the Notifications