கொலுவின் போது எப்படி இருந்தார் தெரியுமா? கடைசி காலத்தில் வலியால் துடித்த பவதாரணி.. விலாசினி கண்ணீர்
சென்னை: பாடகி பவதாரணி கடந்த 6 மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாகவும் கடந்த ஒன்றரை மாதங்களாக அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் அவருடைய மாமா மகள் விலாசினி தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் மகள் பவதாரணி நேற்று மாலை இலங்கையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 47. யாரும் எதிர்பாராத நிலையில் நடந்த இந்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கலாட்டா சேனலுக்கு பவதாரணியின் தாய் மாமா மகள் விலாசினி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒரு மாதத்திற்கு முன்பு தான் பவதாரணி அக்காவுக்கு புற்றுநோய் இருப்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். அதிலும் அவர் 4 ஆவது நிலையில் இருக்கிறார் என்பதும் தெரியும். கடந்த மாதம் dehydration ஆகி மருத்துவமனையில் அனுமதித்ததாக சொன்னார்கள்.
நான் பவா அக்காவின் கணவருக்கு போன் செய்து எங்கே இருக்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர் உடனே அழ தொடங்கினார். என்னாச்சு மாமா ஏன் அழறீங்க என கேட்டதற்கு, உன் அக்காவை கடைசியாக வந்து பார்த்துவிட்டு செல் என்றார். என்னாச்சு என கேட்ட போதுதான் அவருக்கு 4ஆவது நிலை புற்றுநோய் இருக்கிறது என்றார்.
மேலும் பவாவிடம் இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம். அவரை பார்க்கும் போது அழுகையை அடக்கிக் கொள் என்றார். எங்கள் உறவினர் ஒருவர் மருத்துவராக உள்ளார். அவரிடம் பவாவின் மருத்துவ அறிக்கைகளை வாங்கி கொண்டு போய் காண்பித்தோம். அவரும் 4ஆவது ஸ்டேஜில் இருப்பதால் அப்படியே விட்டுவிடுங்கள் என்றார்.
இதற்கு முன்பு கொலுவின் போது பவா அக்காவை பார்த்துவிட்டு நானும் என் அம்மாவும் பயந்துவிட்டோம். நாங்கள் கேட்டதற்கு டயட்டில் இருப்பதாக தெரிவித்தார். அந்த கொலுவில்தான் நான் கடைசியாக அவருடன் சேர்ந்து ராஜா சார் பாடிய பாடலை பாடினேன். ஜனவரி 18 ஆம் தேதி நான் அமெரிக்காவுக்கு சென்றேன். பவதா அக்கா அதற்கு முன்பே இலங்கைக்கு கிளம்பிவிட்டார்.

2020 ஆம் ஆண்டே பவதாவுக்கு பித்தப்பையில் ஏதோ பிரச்சினை இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். பித்தப்பையில் கல் இருப்பதாக சொல்லப்பட்டதா, இல்லை இவர்கள் தவறாக புரிந்து கொண்டார்களா என தெரியவில்லை. என் அப்பாவை பார்த்ததும் அழுதார். கடந்த ஒன்றரை மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் துடித்துள்ளார்.
கடைசியில் உடம்பில் நீரே இல்லை என்றுதான் அனுமதித்தார்கள். அப்போதுதான் அவருக்கு 4ஆவது ஸ்டேஜ் கேன்சர் இருப்பது தெரியவந்தது. இவ்வாறு விலாசினி கண்ணீர் மல்க தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications