தமிழகத்தில் தொடரும் கனமழை- 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை- 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் கனமழை கொட்டி வருகிறது. மேலும் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் மழை தொடருவதால் திருவாரூர், கள்ளக்குறிச்சி, நெல்லை, வேலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து கொட்டி வருகிறது. மேலும் இலங்கை கடலோரப் பகுதி, தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருகிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கடலூர் மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்கிறது வானிலை ஆய்வு மையம். கன்னியாகுமரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்யலாம். இதர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மித மழை பெய்யும் என்கிறது வானிலை ஆய்வு மையம்.

தீபாவளி நாளிலும் மழை
கன்னியாகுமரி, நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை மறுநாளும் நவம்பர் 4-ந் தேதி தீபாவளி நாளிலும் கனமழை கொட்டும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
குமரிக் கடல், மன்னார் வளைகுடா, இலங்கை கடற்பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் இந்த பகுதிகளுக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கேரளா, லட்சத்தீவு கடல் பகுதிகளுக்கு நாளை மறுநாள் வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடிய விடிய மழை- விடுமுறை
இதனிடையே தமிழகத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய மாநிலத்தின் பல பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. வடசென்னை பகுதிக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை ராயபுரம் தண்டையார்பேட்டை திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு ஒரு மணி நேரமாக பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு முதல் விடிய விடிய லேசான மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் கனமழை கொட்டியது. இதனால் ஆறுகள், நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே கனமழை காரணமாக திருவாரூர், கடலூர், விழுப்புரம், நெல்லை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications