நேற்று ரூ.15 இன்று ரூ.10 உயர்வு.. கிராம் வெள்ளியே 77 ரூபாதான்! ஆனா தக்காளி விலையை பார்த்தீங்களா?
சென்னை: சென்னையில் கடந்த ஒரு சில நாட்களில் தக்காளி விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. நேற்று கிலோ ரூ.100க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.110 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியே கிராம் ரூ.77க்குதான் விற்பனை ஆகிறது. ஆனால் அதைவிட தக்காளியின் விலை அதிகமாக இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பருவ மழை, விளைச்சல் குறைவு, தேவை அதிகரிப்பு, சேமிப்பு வசதி இல்லாது போன்றவை தக்காளி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தையை பொறுத்த அளவில் தினமும் 1,200 டன் காய்கறிகள் வரும். இதில் தக்காளி மட்டும் 85-100 லாரிகளில் 750 டன் அளவுக்கு வரும். ஆனால் கடந்த 20 நாட்களாக இந்த தக்காளி வரத்து பாதியாக குறைந்திருக்கிறது. தற்போது வெறும் 35 லாரிகளில் மட்டுமே தக்காளி கோயம்பேடுக்கு வருகிறது.

அதேபோல பெரும்பாலான விற்பனையாளர்களிடம் குளிர்சாதன சேமிப்பு வசதி கிடையாது. இதனால் தக்காளியை சேமித்து வைப்பது சாத்தியமில்லாமல் போய்விடுகிறது. இதற்கு அரசு உதவ வேண்டும் என்று விற்பனையாளர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். நேற்று முன்தினம் கிலோ ரூ.85க்கு விற்பனை செய்யப்பட்டது. இது நேற்று ரூ.15 அதிகரித்து ரூ.100க்க விற்பனையானது. இன்று ரூ.10 அதிகரித்து கிலோ தக்காளி ரூ.110க்கு விற்பனையாகிறது.
தக்காளி மட்டுமல்லாது மற்ற காய்கறிகளின் விலையும் ரூ.100ஐ தாண்டிருக்கிறது. குறிப்பாக சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.150,பட்டாணி விலை ரூ.200, இஞ்சி விலை ரூ.220, பூண்டு விலை ரூ.200 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என்பதை இல்லத்தரசிகள் அதிகம் யூடியூபில் தேட தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications