கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர்! பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட கி.ரா.படித்த அரசு நடுநிலை பள்ளி!
சென்னை: கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தில் கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் என்றழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நினைவாக, அவர் படித்த அரசு நடுநிலைப் பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட கி.ராஜநாராயணன் படித்த அரசு நடுநிலைப் பள்ளியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பொலிவிழந்த நிலையில் இருந்த இடைசெவல் நடுநிலைப் பள்ளிக்கட்டடத்தை, வெள்ளை சுண்ணாம்பு, ஆற்று மணல், கருப்பட்டி, கடுக்காய், முட்டை கலவை போன்றவற்றின் மூலம் சுவர் பூச்சு செய்யப்பட்டுள்ளதால் புதுப் பொலிவு பெற்றுள்ளது.

ஊரக வளர்ச்சி
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஒன்றியம் இடைசெவல் ஊராட்சியில், கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணன் நினைவாக 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட அவர் பயின்ற இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கட்டடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி மூலம் திறந்து வைத்தார்.

கரிசல் இலக்கியம்
"கரிசல் இலக்கியத்தின்", முன்னத்தி ஏர் கி.ரா.என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் இடைசெவல் என்ற கிராமத்தில், ஸ்ரீ கிருஷ்ண இராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது மகனாக 16.09.1922-ல் பிறந்தார். பேச்சுத் தமிழில் மண்மணம் மிக்க கதைகளைப் படைத்தளித்தவர். அவரது படைப்புகளில் இடம்பெற்ற கரிசல் நிலவியலும், வெள்ளந்தித் தனமும், பேரன்புமிக்க மக்களின் வாழ்க்கை முறையும் தனித்துவம் மிக்கவை.

மண்ணின் உழைப்பாளிகள்
இந்த மண்ணின் உழைப்பாளிகள், விவசாயிகள், பிஞ்சுக்குழந்தைகள், கதவு மற்றும் நாற்காலிகள் கூட அவரின் கதை மாந்தர்களாக மாறி மாயம் நிகழ்த்தின. 1958 முதல் 2021 வரை இலக்கிய பணி செய்த திரு. கி.ரா.வுக்கு 1991-ம் ஆண்டு "சாகித்திய அகாடமி விருது" "கோபல்லபுரத்து மக்கள்" என்ற நாவலுக்காக வழங்கப்பட்டது. மேலும், 2016-17ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது திரு. கி.ராவிற்கு வழங்கப்பட்டது. தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்ட திரு. கி.ரா. 2021 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் தனது 99ஆம் வயதில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார்.

வட்டார பேச்சுவழக்கு
வட்டார பேச்சுவழக்கிற்கு தமிழ் இலக்கிய உலகில் உயரிய இடத்தைப் பெற்றுத்தந்த கி.ரா. கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். எனவே "கி.ரா. அவர்களின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அன்னார் பயின்ற இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியானது பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்" என்று முதலமைச்சர் 18.5.2021 அன்று அறிவித்தார்.

பிரத்யேக முறையில்
அதன்படி, 1946ஆம் ஆண்டு கட்டப்பட்டு பல்வேறு கால சூழ்நிலைகளால் பொலிவிழந்த நிலையில் இருந்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கட்டடத்தை, 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், வெள்ளை சுண்ணாம்பு, ஆற்று மணல், கருப்பட்டி, கடுக்காய், முட்டை கலவை போன்றவற்றின் மூலம் சுவர் பூச்சு செய்யப்பட்டு, பழமை மாறாமல் மெருகேற்றப்பட்டு, புதிய ஓடுகள், தேக்கு ஜன்னல்கள், பனங்கை சட்டங்கள் பொருத்தப்பட்டு, பழைய பள்ளிக் கட்டடம் புதுப்பிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications