களை கட்டும் நாங்குநேரி, விக்கிரவாண்டி.. திமுக, அதிமுக, காங். வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு
Recommended Video
சென்னை: நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில், திமுக கூட்டணி, மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இரு தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் கடந்த 23-ஆம் தேதி துவங்கியது ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை வரை தேய்பிறை இருந்தது. சனிக்கிழமைவரை அமாவாசை தினம். எனவே, திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை முதல் வளர்பிறை துவங்கியுள்ளது.
இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான இன்றைய தினம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளிடம் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதேபோல நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரன் மதியம் 2.15 மணி அளவில் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆகமொத்தம் இரு முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் இடைத் தேர்தலில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 1ம் தேதியான நாளை நடைபெறும். அக்டோபர் 3ஆம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.