15 நாட்களாக ஒரு பைசா கூட உயராது பெட்ரோல் டீசல் விலை... குஷியில் பொதுமக்கள்
சென்னை: கடந்த 15 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றும் ஏற்படவில்லை. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் அடைந்துள்ளனர்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, வரி உயர்வு ஆகியவை காரணமாக பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் தொடர்ந்து உயர்ந்தது. இந்தியாவின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை சதமடித்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் கடந்த இரண்டு வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படவில்லை.
தொடர்ந்து 15ஆவது நாளாக இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 93.11 ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டருக்கு 86.45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 91.17 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் 81.47 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 97.57 ரூபாய்க்கும், டீசல் 88.60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெட்ரோல் 91.35 ரூபாய்க்கும் டீசல் 84.35 ரூபாய்க்கும் விற்பனை செய்யபுடுகிறது.
தற்போது சர்வதேச அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 65.61 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில், கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து ஒபெக் நாடுகள் முடிவு செய்துள்ளன. இதன் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மத்திய அரசு தனது கலால் வரியைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனால், மத்திய அரசு இதுவரை அதுபோல எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேநேரம், 5 மாநில தேர்தல் நெருங்குவதால் பெட்ரோல் டீசல் விலையும் மாற்றி அமைக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications