டமாரென்று கேட்ட சத்தம்.. திருவள்ளூரில் பயங்கர ரயில் விபத்து.. ஆபத்பாந்தவனாக மாறிய கவரைப்பேட்டை மக்கள்
சென்னை: திருவள்ளூர், கவரைப்பேட்டை பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில் - சரக்கு ரயில் மோதி ஏற்பட்டுள்ள விபத்தால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. சில பெட்டிகளில் தீப்பற்றி எரிந்தது. மக்களின் அழுகுரல் கேட்டு, அதிகாரிகள் வருவதற்கே முன்பே மீட்புப் பணியில் இறங்கியது கவரைப்பேட்டை உள்ளூர் மக்கள் தான்.
சென்னை, திருவள்ளூர், கவரைப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மைசூர் - தர்பங்கா (12578) எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. லோகோ பைலட் சிக்னல் வழங்கிய பிறகே கிளம்பியதாக கூறப்படுகிறது. எனவே தவறான சிக்னல் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயிலில் 1,400 பேர் பயணம் செய்துள்ளனர். இதில், 19 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் மற்றும் சரக்கு ரயில் சில பெட்டிகள் தடம்புரண்டு, பற்றி எரிந்தது. தற்போதுவரை சுமார் 13 பெட்டிகளில் தீப்பற்றியிருப்பது தெரியவந்துள்ளது. எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 ஏசி பெட்டிகளில் தீப்பற்றியுள்ளது. இந்த சம்பவத்தால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
அரக்கோணம் பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதிகளில் இருந்து ஏராளமான ஆம்புலஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. ரயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. காவல்துறை, தீயணைப்புத்துறை, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்ளூர் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த விபத்து காரணமாக , அந்த வழித்தடங்களில் பல ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போதுவரை உயிரிழப்பு குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் மீட்புப் பணிகள் முடிந்த பிறகே முழு விபரம் வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் நாசர், தலைமை செயலாளர் முருகானந்தம், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உள்ளிட்ட உயரதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மருத்துவ குழுவும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். பொதுவாக இதுபோன்ற விபத்துகளில் உள்ளூர் மக்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
இந்த விபத்திலும் உள்ளூர் மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இரவு 8.30 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. பொன்னேரி அருகே டமார் என்ற பலத்த சத்தம் கேட்க உள்ளூர் மக்கள் அலெர்டாகி உள்ளனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தபோதே, ரயில் பெட்டிகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. உடனடியாக அவர்கள் களத்தில் இறங்கி மீட்புப் பணியை தொடங்கினார்கள். அவர்களே பயணிகளை மீட்டு, தண்ணீர் கொடுத்து தங்களால் முடிந்த முதலுதவிகளை செய்துள்ளனர்.
இதைதொடர்ந்து பயணிகளும் ஜன்னலை உடைத்து வெளியில் வந்தனர். அப்படி தப்பித்த பயணிகளும் தங்களை மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளனர். தற்போது தீயணைப்புத்துறை, காவல்துறை , பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு அடுத்தடுத்து வருகை புரியும் நிலையில், அவர்களுக்கும் கைக்கொடுத்து உள்ளூர் மக்கள் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக ரயில்வேதுறை உதவி மையம் அமைத்துள்ளது. அதன்படி மக்கள் 04425354151 மற்றும் 04424354995 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications