தமிமுன் அன்சாரி எந்த விதத்தில் குறைந்துவிட்டார்? திமுக மீது கடுகடுக்கும் மஜக! என்ன பின்னணி?
சென்னை: மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியின் தாயார் அண்மையில் மறைந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினை தவிர மற்ற எல்லா தலைவர்களும் இரங்கல் தெரிவித்த நிகழ்வை சுட்டிக்காட்டி மஜகவினர் திமுகவுக்கு கேள்விக்கணைகளை வீசியுள்ளனர்.
இத்தனைக்கும் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி தோழமை பாராட்டினார் தமிமுன் அன்சாரி. இப்போதும் அதிமுக அழைப்பு மேல் அழைப்பு விடுக்கும் நிலையிலும் எந்த முடிவும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார்.

இந்தச் சூழலில் தமிமுன் அன்சாரி தாயார் உம்மு சல்மா கடந்த வாரம் காலமானார். அவரது மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், சீமான், நெல்லை முபாரக், தனியரசு, கருணாஸ், நாராயணசாமி, ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், டி.ராஜா, கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், அன்புமணி ராமதாஸ், துரை வைகோ, வேல்முருகன், ஜவாஹிருல்லா, ஜான் பாண்டியன், என ஏறத்தாழ தமிழக அரசியல் களத்தில் உள்ள அனைத்து முக்கிய பிரமுகர்களும் அலைபேசி மூலமும், சமூக வலைதளங்கள் மூலமும் தங்கள் இரங்கலை தெரியப்படுத்தினர்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் மட்டும் இரங்கலோ, ஆறுதலோ தெரிவிக்காதது மனிதநேய ஜனநாயக கட்சியினர் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. முதல்வர் குறைந்தபட்சம் சமூக வலைதளப் பக்கத்தில் 2 வரியாவது இரங்கலை பதிவு செய்திருக்கலாம் என ஆதங்கப்படும் மனிதநேய ஜனநாயக கட்சியினர், ரங்கராஜ் பாண்டே தந்தை மறைந்த போது அவரது வீடு தேடிச் சென்று முதல்வர் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறிய நிகழ்வை சுட்டிக்காட்டி அவரை விட தமிமுன் அன்சாரி எந்த விதத்தில் குறைந்துவிட்டார் என சமூக வலைதளப் பக்கங்களில் கமெண்ட்கள் மூலம் விமர்சித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications